திருப்பதி உண்டியலில் கண்ணை உறுத்திய தங்க பிஸ்கட்... ஒரு நிமிட சலனம்.. திசைமாறிய ஊழியர் வாழ்க்கை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்ககிறார்கள். அப்படி ஏழுமலையானை பார்க்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு காணிக்கையை திருமலையில் உள்ள உண்டியலில் செலுத்துகிறார்கள். பணம், தங்கம், வெள்ளி போன்றவை செலுத்தப்படுகிறது. அப்படி செலுத்தப்பட்ட தங்க பிஸ்கட்டை திருடியுள்ளார் ஊழியர் ஒருவர். டிராலி வாகனத்தில் கையும் களவுமாக சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானான வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்கிறார்கள். திருமலையில் ஏழுமலையானை காணும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முடிந்ததும் பிரகாரத்தை வலம் வரும்போது, அங்குள்ள பிரதான உண்டியல்களில் தங்கம், வெள்ளி, ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்கள் போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்துவார்கள்.

அப்படி செலுத்தப்படும் காணிக்கையை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் எடுத்து சென்று எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்வார்கள். இந்நிலையில் ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் பிரதான உண்டியலில் காணிக்கையாக தங்கப் பிஸ்கட்டை செலுத்தி இருந்தார். இந்நிலையில் கோவிலில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்த பென்சிலய்யா என்பவர் திருடி கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு டிராலி வண்டியில் பதுக்கி வைத்துள்ளார்.
அதை, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்தார்கள். பென்சிலய்யாவை பிடித்து விசாரித்தனர். அவர், தங்கப் பிஸ்கட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை போலீசில் ஒப்படைத்து, அவர் மீது புகார் அளித்தனர்.
இதையடுத்து திருப்பதி திருமலை-1 டவுன் போலீசார் பென்சிலய்யாவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்து தங்கப் பிஸ்கட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கப் பிஸ்கட் 100 கிராம் எடையில் இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர். திருப்பதி கோவிலில் ஊழியர் தங்கம் திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications