தீபாவளி முடிந்து திருப்பதி போறீங்களா.. கபிலேஸ்வரர் கோவிலை மிஸ் பண்ணிடாதீங்க.. அருமையான வாய்ப்பு
திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத ஹோம மகோற்சவம் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வருகிற 22-ந்தேதி ஹோம மகோற்சவத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 22, 23-ந்தேதிகளில் கணபதி ஹோமம், 24, 26-ந்தேதிகளில் சுப்பிரமணியசாமி ஹோமம், 27-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 28-ந்தேதி நவகிரக ஹோமம், 29-ந்தேதி கால பைரவர் ஹோமம் நடக்கிறது என்று தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் திருமலைக்கு செல்வோர் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவில், கபில தீர்த்தம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பதி நகரத்தையொட்டியே அமைந்துள்ளது. இந்த கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரிக்கிறது. பொதுவாக இந்த கோயிலில் மகா சிவராத்திரி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய பண்டிகைகளின் போது இங்கு வெகு விமரிசையான திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத ஹோம மகோற்சவம் வரும் அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு உலக நலனுக்காக வருகிற அக்டோபர் 22-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி வரை ஒரு மாதம் விசேஷ பூஜை மற்றும் கார்த்திகை மாத ஹோம மகோற்சவம் நடக்கிறது.
வருகிற அக்டோபர் 22-ந்தேதி ஹோம மகோற்சவத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 22, 23-ந்தேதிகளில் கணபதி ஹோமம், 24, 26-ந்தேதிகளில் சுப்பிரமணியசாமி ஹோமம், 27-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 28-ந்தேதி நவகிரக ஹோமம், 29-ந்தேதி கால பைரவர் ஹோமம் நடக்கிறது.
அக்டோபர் 30-ந்தேதியில் இருந்து நவம்பர் 7-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டி ஹோமம்), நவம்பர் 8-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர ஹோமம்), நவம்பர் 19-ந்தேதி தர்ம சாஸ்த்திர ஹோமம், நவம்பர் 20-ந்தேதி சண்டிகேஸ்வரர் ஹோமம், திரிசூல ஸ்நானம், பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
ஹோமத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும். ஹோமத்தில் பங்கேற்பவர்கள் கட்டாயம் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும். வருகிற அக்டோபர் 27-ந்தேதி வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி கல்யாணம், நவம்பர் 18-ந்தேதி மாத சிவராத்திரியையொட்டி சிவன்-பார்வதி கல்யாணம் நடக்கிறது" இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications