திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம்.. 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி 3 கிமீ நீளும் வரிசை
திருப்பதி: இன்று தமிழ்ப் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், கடந்த சனி, ஞாயிறுகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தார்கள். திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாதோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வது உண்டு. குறிப்பாக கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்று வருகிறார்கள்..இதனால் திருப்பதி செல்லும் ரயில்கள் மற்றும் ரேணிகுண்டா வழியாக செல்லும் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது சவாலாக உள்ளது. பல ஏழுமலையான் பக்தர்கள் தமிழ் புத்தாண்டு பண்டிகையையொட்டி நேற்று முன்தினமும், நேற்றும் திருப்பதிக்கு சென்றார்கள்.

பொதுவாகவே சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது புத்தாண்டையொட்டி வந்ததால், ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் திருப்பதியிலும், திருமலையிலும் திரும்பும் இடமெல்லாம் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து காணப்பட்டது.
திருப்பதி திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாதோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது. இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு 24 மணி நேரம் வரை ஆனதாக கூறப்படுகிறது. வெறும் 14 மணி நேரத்தல் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்யதாக கூறப்படுகிறது.
இன்று தமிழ் புத்தாண்டு என்பதால், பக்தர்கள் கூட்டம் இன்றும் அலைமோதுகிறது. பக்தர்கள் வெயிலில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. திருமலையில் கடுமையான வெயில் காரணம் வெப்பம் தற்போது தகிக்கிறது. இதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் அதிகமாக தண்ணீர் அருந்துவது நல்லது.
திருமலையில் ஏழுமலையானை நேற்று முன்தினம் 72 ஆயிரத்து 923 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், 35 ஆயிரத்து 571 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 33 லட்சம் கிடைத்ததாக தேவஸ்தான நிர்வாகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications