ஏழுமலையானே மீண்டும் நான் அமைச்சராகணும் - திருப்பதியில் வேண்டிக்கொண்ட ராஜேந்திரபாலாஜி
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் மீண்டும் 3வது முறையாக அதிமுக அரசு பதவியேற்கும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவியேற்பார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
திருப்பதி: தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரார்த்தனை செய்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என்றும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வாக்குகள் பதிவான நாளில் இருந்தே பல வேட்பாளர்கள் தூக்கத்தை தொலைத்து விட்டனர். சிலரோ யாகங்கள், பூஜைகள் என கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என்றார்.
தமிழகத்தில் மீண்டும் 3வது முறையாக அதிமுக அரசு பதவியேற்கும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவியேற்பார். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமையாக இல்லை. தேர்தல் நேரத்தில் எவ்வாறு சுயமாக செயல்பட்டோம் என்பது அனைவரும் பார்த்திருப்பார்கள். சுயமாக சிந்தித்து தொண்டர்களை நம்பி செயல்படக்கூடிய மாபெரும் இயக்கம் அதிமுக என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
நடிகை ராதா விவகாரம்... எல்லாத்துக்கும் காரணமே அந்த அதிமுக 'தல'தான்.. கண்ணீர் வடித்த எஸ்.ஐ. கணவர்
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் தேதி நெருங்கி வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி திருப்பதி கோவிலுக்கு சென்று வெற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ராஜேந்திரபாலாஜியின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து வெற்றியைத் தருவாரா திருப்பதி பாலாஜி.