இனி மாட்டு கொழுப்பு, பன்றிக் கொழுப்புனு கம்ப்ளைன்ட்டே வராது! இந்த பிக்பாஸ் "நந்தினி" எடுத்த அதிரடி
திருப்பதி: திருப்பதி லட்டு தயாரிப்புக்காக நெய் ஏற்றி வரும் வாகனங்களின் நடமாட்டத்தை கண்டறிய ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக நந்தினி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் நந்தினி நெய்யில் நடுவே யாரும் கலப்படம் செய்ய முடியாது என்ற செய்தி திருப்பதி பக்தர்களிடையே நிம்மதியை கொடுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இத்தனை கூட்டம், சுவாமி தரிசனம் செய்ய இத்தனை மணி நேரம், மழையிலும் வெயிலிலும் கால் கடுக்க நின்ற பக்தர்கள், உண்டியல் வருமானம் எவ்வளவு, முடி காணிக்கை எவ்வளவு என்ற விஷயங்கள்தான் ஹாட் டாப்பிக்காக இருக்கும்.

ஆனால் இப்போது அதிலும் பிரம்மோற்சவம் நடைபெறவுள்ள நிலையில் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு கலப்படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் போது கலி முத்தி போச்சு என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
நம்மை படைத்த கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதத்தில் கலப்படம் செய்வது என்பது மன்னிக்க முடியாத பாவம் என்பதுதான் பொதுமக்களின் வேதனையாக இருக்கிறது. இந்த நிலையில் திருப்பதியில் லட்டு தயாரிக்க கர்நாடகாவின் நந்தினி நிறுவனத்தின் நெய்தான் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் நந்தினி பாலின் விலையேற்றம் காரணமாக அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய்யின் விலையும் ஏறியது. இதை அளிக்க திருப்பதி தேவஸ்தானம் மறுத்து அந்த கான்ட்ராக்டை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் கொடுத்தது. இதனால்தான் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆந்திராவில் இந்த விவகாரம் புயலை கிளப்பியது. இதனால் கோயிலின் புனிதம் கெட்டு விடக் கூடாது என்பதற்காக இனி லட்டு தயாரிக்க கர்நாடகா பால் கூட்டமைப்பு பிரபல நந்தினி நெய்யே பயன்படுத்தப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடகா பால் கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கூறியிருப்பதாவது: திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நந்தினி பிராண்ட் நெய் உபயோகப்படுத்தப்படுகிறது. நெய் கொண்டு செல்லும் வாகனங்கள் எங்கு நிற்கின்றன.
எந்த வழியாக செல்கின்றன என்பதை கண்டறிய வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த தருணத்திலும் கலப்படம் நடக்காமல் இருப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என அவர் தெரிவித்தார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications