திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - மலையப்பசுவாமி வீதி உலா ரத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் - மலையப்பசுவாமி வீதி உலா ரத்து.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதில் வீதி உலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தற்போது வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை அடுத்து கடந்த மாதம் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வராமல் ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெற்றது.

ஆன்லைனில் புக் செய்து வந்தவர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்வு திருக்குளத்தில் நடைபெறாமல் தொட்டியில் உள்ள நீரீல் நடைபெற்றது.
அடுத்ததாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வீதி உலா நடத்தப்படும் என முதன்மை செயல் அலுவலர் தெரிவித்திருந்தார்.
வரும் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 25ஆம் தேதி பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு முதன்மை செயல் அலுவலர் மாற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக வந்துள்ள முதன்மை செயல் அலுவலர் 4 மாட வீதிகளை ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளின் ஆலோசனைப்படி கோவில் வளாகத்திற்குள் வைத்து பிரம்மோற்சவத்தை ஏகாந்தமாக நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications