திருப்பதியில் நூடுல்ஸ் - ஃபிரைட் ரைஸ்க்கு விரைவில் தடை.. தேவஸ்தானம் எடுத்த முடிவு
திருப்பதி: திருப்பதி திருமலையில் உள்ள ஹோட்டல்களில் விரைவில் நூடுல்ஸ் - ஃபிரைட் ரைஸ்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனல்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் திருப்பதிக்கு முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆந்திரா மட்டுமின்றி தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்று தேவஸ்தான நிர்வாகத்தின் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி விழா குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேவஸ்தான நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பிறகு திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் கூறுகையில், ‛‛திருமலையில் உள்ள உணவகங்களில் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும். ஹோட்டல்களில் சாப்பாடு, சாம்பார், தோசை, இட்லி, களி உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் தவிர துரித உணவுகளுக்கு தடை விதிக்கப்படும்.
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி எந்த எந்த இடங்களில் தரிசன டோக்கன்கள் வழங்குவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும்'' என்று கூறினார்.
இதற்கு திருப்பதி பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவிலை சுற்றிய ஹோட்டல்களில் பாரம்பரிய உணவுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது வரவேற்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் கோவிலை சுற்றிய ஹோட்டல்களில் அசைவ உணவுகளுக்கு தடை உள்ளது. ஆனால் சைவ உணவாக இருந்தாலும் கூட பாரம்பரிய உணவை மட்டுமே விற்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு ஹோட்டல்களில் இந்திய உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உணவகங்களில் பணியாற்றுவோர் இந்திய பாரம்பரிய உடை குறிப்பாக ஆந்திராவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் உடைகளை அணிய வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகி ஒருவர் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications