நெற்றியில் நாமம்.. திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பிரதமர் மோடி.. வேண்டியது என்ன?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் பிரதமர் மோடி. அவரது வருகையை முன்னிட்டு திருமலை, திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் ஆக பதவியேற்ற பிறகு 5வது முறையாக திருப்பதி வந்துள்ளார் பிரதமர் மோடி.
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று மாலை விமானம் மூலம் திருப்பதி வந்தார். ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன், துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் பெ. ராமசந்திராரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, எம்பிக்கள் மிதுன் ரெட்டி, குருமூர்த்தி, ரெட்டப்பா, டிஜிபி ராஜேந்திர நாத், முதன்மை செயலாளர் ஜவஹர் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு சென்று அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார் மோடி. இன்று திங்கட்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. மோடி தனது நெற்றியில் நாமம் போட்டு பிரத்யேக வஸ்திரம் அணிந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். தங்கக் கொடி மரத்தை வணங்கினார் மோடி.
ஏழுமலையானை வழிபட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள், வேத மந்திரங்கள் ஓதப்பட்டு வழங்கப்பட்டன. அவற்றை பய பக்தியுடன் பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.
இதனையடுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி "140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழுமலையான் கோவிலில் தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடியின் திருப்பதி வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பதி முழுவதும் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோடியின் வருகையை முன்னிட்டு விஜபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications