புரட்டாசி சனி..விஐபி தரிசனம்..எல்லாம் நல்லபடியா முடியணும் ஏழுமலையானே..ஓபிஎஸ் வேண்டுதல்
திருப்பதி: அதிமுகவில் அதிகார பதவி பிரச்சினைகளுக்கு இடையே திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானிடம் வேண்டுதல் வைத்திருக்கிறார் ஓபிஎஸ்.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில்தான் சாமானிய மக்கள் முதல் மிகப்பெரிய விஐபிக்கள் வரை ஆண்டுதோறும் ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வருகின்றனர்.
ஏழை மக்கள் மணி கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருந்து சில நிமிடங்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தால் அவரது அருள் பரிபூரணமாக கிடைத்து விடுகிறது. அம்பானி முதல் அரசியல்வாதிகள் வரை பலரும் லட்சக்கணக்கான ரூபாய்களை உண்டியலில் காணிக்கை செலுத்தி விஐபி பிரேக் தரிசனத்தில் சில நிமிடங்களில் தரிசனம் செய்து விடுகின்றனர்.
அதிமுக எம்எல்ஏக்கள்,மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிச்சாமி..அனல் பறக்குமா?
திருப்பதி + தமிழக அரசியல்வாதிகள்
திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று சுவாமி தரிசனம் அரசியல் தலைவர்களும் படையெடுத்துள்ளனர். திருமலை சென்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாண்டிச்சேரி துணை முதல்வர் நமச்சிவாயம், அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒரே விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளனர். இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
ஏழுமலையானிடம் வேண்டுதல்
புரட்டாசி மாதத்தில் ஓ.பன்னீர் செல்வம் தவறாமல் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு அவரது மனைவி உயிரிழந்த காரணத்தால் எந்த கோவிலுக்கும் போகாமல் இருந்தார் ஓபிஎஸ். ஓராண்டு நிறைவிற்குப் பிறகு காசி, ராமேஸ்வரம் சென்று யாகம் நடத்தி திதி கொடுத்து விட்டு வந்த ஓ.பன்னீர் செல்வம் குல தெய்வ கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு சென்று வந்தார். இந்த நிலையில் புரட்டாசி 3வது சனிக்கிழமையான இன்று ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைத்து விட்டு வந்திருக்கிறார்.
இபிஎஸ் + ஓபிஎஸ்
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கியுள்ளது. கட்சிக்குள் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் இணைக்க ஒரு போதும் சம்மதிக்கப் போவதில்லை எடப்பாடி பழனிச்சாமி. உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்த பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் திருப்பதிக்கு குடும்பத்தோடு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வந்தார். இப்போது ஓ.பன்னீர் செல்வம் திருப்பதிக்கு சென்று வந்திருக்கிறார்.
திருப்பம் வருமா
அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்து படிப்படியாக உயர்ந்த ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக, துணை முதல்வராக, கட்சியில் பொருளாளராக, ஒருங்கிணைப்பாளராக பல பதவிகளை வகித்தார். இப்போது கட்சியை விட்டே நீக்கப்பட்டு உள்ளார். தன்னை யாரும் கட்சியை விட்டு நீக்க முடியாது என்று கூறினாலும் கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே எடப்பாடி பழனிச்சாமிக்கே ஆதரவாக உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் நம்பியிருப்பது தேர்தல் ஆணையத்தையும் உச்சநீதிமன்றத்தையும் மட்டும்தான். அதன் காரணமாகவே தனக்கு நல்ல செய்தி தேடி வர வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானை சரணடைந்துள்ளார். பெருமாளின் அருள் கிடைக்குமா? சாதகமாக தீர்ப்பு வருமா பார்க்கலாம்.