ரத சப்தமிக்கு தயாராகும் திருப்பதி ஏழுமலையான் கோவில்..ஜன.28ல் மினி பிரம்மோற்சவம்
திருப்பதி: ரத சப்தமி விழா திருமலை திருப்பதியில் ஜனவரி 28ஆம் தேதி சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் 7 வாகனங்களில் காலை முதல் இரவு வரை நான்கு மாட வீதிகளில் உலா வருவார் மலையப்பசுவாமி. மினி பிரம்மோற்சவம் போல ரத சப்தமி விழா திருப்பதியில் கொண்டாடப்படும்.
சூரியபகவான் தை மாதம் தனது வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். சூரிய ஜெயந்தி விழா ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. ரதசப்தமி நாளில் நவக்கிரகங்களில் சூரியனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து ஒரு நெய்விளக்கு வைத்துவர சூரிய தோஷம் விலகும். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும்.
ரத சப்தமி நாளன்று கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி விரதம் இருந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பது ஒரு சில மாநிலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரத சப்தமி தினத்தை ஒரு திருவிழாவாக கொண்டாடும் வழக்கம் வைஷ்ணவ கோவில்களில் உள்ளது. இந்த மாதம் 28ஆம் தேதி ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது.
திருமலை திருப்பதியில் ரத சப்தமி அன்று ஒருநாள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். இந்த நாளில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அதிகாலை முதல் இரவு வரை 7 வாகன சேவைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காலை 5.30 மணிக்கு சூர்யபிரபை வாகனம்,காலை 9.00 மணிக்கு சின்ன சேஷ வாகனம், காலை 11.00 மணிக்கு கருட வாகனம்,மதியம் 1.00 மணிக்கு ஹனுமந்த வாகனம்,மதியம் 2.00 மணிக்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சக்ரஸ்நானம்,
மாலை 4.00 மணிக்கு கல்ப விருட்ச வாகனம்,மாலை 6.00 மணிக்குள் சர்வ பூபால வாகனம் மற்றும்இரவு 8.00 மணிக்கு சந்திர பிரபா வாகனங்களில் அருள்பாலிப்பார் மலையப்பசுவாமி.
ஒரே நாளன்று ஏழுமலையானின் ஏழு வாகன சேவைகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் காரணத்தால் அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள்.எனவே அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.
28ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் பொதுவாகவே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்றைய தினம் அதிகாலை முதலே மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் பக்தர்கள் குவிந்து விடுவார்கள். எனவே சாமி ஊர்வலத்தை கண்டு தரிசிப்பதற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி, பால் போன்ற அடிப்படை ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் பணியில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இது தவிர பாதுகாப்பு, கண்காணிப்பு, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய விஷயங்களிலும் தேவஸ்தான நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. அன்றைய தினம் ஏழுமலையான் கோவிலில் கல்யாணம் உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட இன்று மாலை 3 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஒதுக்கீடு அடிப்படையில் டோக்கன்கள் வெளியிடப்படுகிறது. எனினும், கோவிலில் பாலாலயம் நடக்க இருப்பதால் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவது பிப்ரவரி மாதம் 22ஆம் தேதியில் இருந்து 28ஆம்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.