திருப்பதி செல்வோர் கவனத்திற்கு.. மூடப்படும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி: சென்னையை தாக்கிய மழை, அப்படியே வங்கக்கடல் வழியாக ஆந்திரா பக்கம் சென்றுவிட்டது. தற்போது ஆந்திராவில் சித்தூர், திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை இன்று (வியாழக்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் தெற்கு பகுதிகளை நோக்கி நகர்ந்தது. இதனால் சென்னையில் பெய்ய வேண்டிய கனமழை இப்போது திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. திருப்பதி செல்லும் மலைப்பாதையில் இரண்டு இடங்களில் பாறை சரிந்து விழுந்தது, விடாமல் திருமலையில் மழை பெய்து வந்ததால், ஏழுமலையான் கோயில் வளாகத்திலும் மழை நீர் தேங்கியது. தொடர் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் எடுத்து வருகிறது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் காணொலி காட்சி மூலம் பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இணை அதிகாரிகள் கவுதமி, வீரபிரம்மன், பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், என்ஜினீயர் சத்யநாராயணா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டம் பற்றி திருப்பதி வேதஸ்தான அதிகாரிகள் பேசுகையில், "திருப்பதி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை வரையிலும், அதன்பிறகு அடுத்த 36 மணி நேரத்துக்கும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர மாநில அரசின் பிற துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, நிலைமையை மதிப்பிடுவதற்கும், ஒவ்வொரு துறையின் தயார் நிலை குறித்தும் விரிவாக விவாதித்தோம்.
இடைவிடாத மழையைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. திருமலையில் உள்ள கோகர்ப்பம் சர்க்கிளில் இருந்து தொடங்கும் பாபவிநாசனம் சாலையில் பக்தர்களின் நுழைவை தேவஸ்தானம் ஏற்கனவே மூடி தடுத்திருக்கிறது. இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை இன்று (வியாழக்கிழமை) முதல் முழுமையாக மூடப்படுகிறது. சூறாவளி காற்று, மழை குறைந்த பிறகு இந்த நடைபாதையில் பக்தர்கள் திருமலைக்கு நடந்து வர நடவடிக்கை எடுப்பது குறித்து பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
திருப்பதி மலைப்பாதைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டாலும், பாறைகள் உருண்டு கீழே விழுந்தாலும் அவற்றை அகற்ற, தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு போதுமான எரிபொருளை (டீசல்) வைத்திருப்பது குறித்து பொறியாளர் பிரிவு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதித்தோம். பக்தர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவக் கருவிகள், ஆம்புலன்சுகள், மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
மழை நிலவரம் குறித்து பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க எஸ்.வி.பி.சி. சேனல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேவஸ்தான போக்குவரத்துப் பிரிவு பொது மேலாளர், பறக்கும்படை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி, மருத்துவக் கண்காணிப்பாளர் (சிவில் அறுவை சிகிச்சை நிபுணர்), என்ஜினீயர்கள் உள்பட 15 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைப் பதிலளிப்புப் படைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மழை வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்" இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications