இது என்னடா ஏழுமலையானுக்கு வந்த சோதனை.. திருப்பதி கோவில் வருமானத்துக்கு மொத்தமாக வேட்டு வைத்த கொரோனா!
திருப்பதி: கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் வருமானம் 40 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. பக்தர்களின் வருகை பெருமளவு குறைந்ததால் வருமானம் அடியோடு குறைந்துள்ளது.
இந்தியாவை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து விட்டது. கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து துறையும் சரிவை சந்தத்துள்ளது.
இந்த கொரோனா பாதிப்பு பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமையான் கோவிலையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே அதிக அளவில் வருமானம் குவிக்கும் கோவிலாக திருப்பதி ஏழுமையான் கோவில் திகழ்ந்து வருகிறது.

வருமானத்துக்கு வேட்டு வைத்த கொரோனா
இங்கு உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் தினமும் பல பல கோடிகளை தாண்டும். இது தவிர சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை, லட்டு விற்பனை, தலை முடி ஏலம் என அங்குள்ள அனைத்து சேவைகள் மூலமும் தினமும் வரும் வருமானத்தை கணக்கிடவே பல மணி நேரம் ஆகும். ஆனால் பேய் போல் வந்த கொரோனா திருப்பதி ஏழுமலையான் வருமானத்துக்கும் வேட்டு வைத்து விட்டது.

மிக மிக குறைவு
கொரோனா வந்த தொடக்க காலத்திலேயே சில மாதம் பக்தர்களை அனுமதிக்காமலும், சில மாதம் மிக குறைவான பக்தர்களையே அனுமதித்தது திருப்பதி கோவில் நிர்வாகம். இதனால்உண்டியல் வருமானம் சொற்ப அளவாக ரூ.1 கோடிக்கும் குறைவாகவே இருந்து வந்தது. முதல் அலை தாக்கம் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம்தான் ரூ.2 கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் பெற்றது.

தரிசன கட்டுப்பாடு
அதன்பிறகு இரண்டாம் அலை தொடங்கிய பிறகு மீண்டும் உண்டியல் வருமானம் குறைந்தது. ஊரடங்கு காரணமாக இலவச தரிசனம் ரத்துசெய்யப்பட்டு 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதால் வருமானம் குறைந்தது. தற்போது கொரோனா ஓரளவு குறைந்து விட்டதால் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் உண்டியல் வருமானம் 2 கோடியை தாண்டியுள்ளது.

40 சதவீதம் குறைவு
கொரோனா ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த திருப்பதி கோவிலில் 40% அளவு வருமானம் குறைந்துள்ளதாக தெரியவந்துளளது. இதற்கு முன்பு திருப்பதி கோவில் இப்படி ஒரு வருமான சரிவை சந்தித்து இல்லை என்றும் கூறப்படுகிறது. திருப்பதி கோவிலுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.2937 கோடி ரூபாய் அளவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பட்ஜெட் போட்டுள்ளது. வருமானம் குறைந்துள்ளதால் இந்த பட்ஜெட் தொகையை குறைக்க தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications