திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு.. தோஷத்தை கழிக்க சாந்தி யாகம்! கோமியம் தெளித்து குங்கிலிய புகை
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தோஷத்திற்கு பரிகாரம் காண இன்று ஏழுமலையான் கோவிலில் சாந்தி யாகம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவிலில் உள்ள பிரசாத தயாரிப்பு கூடம், லட்டு விநியோக கவுண்டர் ஆகியவற்றில் நாட்டுப் பசுவின் 'கோமியம்'தெளிக்கப்பட்டு குங்கிலிய புகை காட்டப்பட்டது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய அபச்சாரம் என கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை அடுத்து பல இந்து அமைப்புகள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் கொழுப்பு, எருமை கொழுப்பு, மீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலந்துள்ளதாக மத்திய அரசின் பகுப்பாய்வு அறிக்கையும் உறுதி செய்துள்ளது. மேலும் திருமலைக்கு நெய் சப்ளை செய்தது திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்ததோடு, நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.
தொடர்ந்து லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதற்கு பரிகாரம் செய்யும் வகையிலும் பக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பதி திருமலை கோவிலில் சாந்தி யாகம் நடத்தப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதை அடுத்து இன்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை சாந்தியாகும் நடத்தப்பட்டது.
கோவிலின் தலைமை அர்ச்சகர் மற்றும் ஜீயர்கள் கலந்து கொண்டு சாந்தி யாகம் நடத்தினர். தொடர்ந்து லட்டு தயாரிக்கும் அறையில் நாட்டு பசு மாட்டின் கோமியம் மூலம் தயாரிக்கப்பட்ட ஐந்து புனித பொருட்கள் அடங்கிய பஞ்சகாவியா மூலம் ஒட்டுமொத்த கோவில் வளாகமும் தூய்மைப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் சியாமளா ராவ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் 8 அர்ச்சகர்கள் மூன்று ஆகம புரோகிதர்கள் கலந்து கொண்டு இந்த யாகத்தை நிறைவு செய்தனர். இதை அடுத்து ஏழுமலையான் கோவில் பிரசாத தயாரிப்பு கூடம், லட்டு விநியோக கவுண்டர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நாட்டு பசுவின் கோமியம் கலந்த பஞ்சகாவியா தெளிக்கப்பட்டு குங்கிலிய புகை காட்டப்பட்டது.
குங்கிலிய மரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசின் போன்ற ஒரு பொருள் குங்கிலியம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக இறை வழிபாட்டின் போது சாம்பிராணி மற்றும் குங்கிலிய பிசினை கலந்து புகை போடுவது வழக்கம். குங்கிலியப் புலகையை அக்காலங்களில் அரசர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் இடங்களில் வாசனை திரவியமாகவும், கொடிய நச்சு பூச்சிகளை விரட்டவும் பயன்படுத்தினர். குங்கிலிய பொடியை நெருப்பில் போட்டு வீட்டில் காட்டும்போது விஷக்காற்று மற்றும் தோஷங்கள் நீங்கி அந்த இடம் தூய்மைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications