திருப்பதி கூட்ட நெரிசல்.. லட்டுக்கு பரிகார தீட்சை செய்த பவன் கல்யாண்.. இப்போ செய்வாரா? ரோஜா ஆவேசம்
திருப்பதி: திருப்பதியில் திருமலையில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்கச் சென்ற 6 பேர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே காரணம் என்று விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ரோஜா, இதற்கு காரணமானோரை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்.

திருப்பதி விவகாரம்:
அதன்படி இந்தாண்டு டோக்கன் வழங்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் பதிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் செய்துள்ள ரோஜா, இதற்கு காரணமானோரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரோஜா
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரா முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா, "ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் திருப்பதிக்கு பல லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால், திருப்பதியில் வரலாற்றில் இதுவரை நடக்காத மோசமான சம்பவம் நேற்று நடந்துள்ளது. இதில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு முதல்வர் சந்திரபாபு, உள்துறை அமைச்சர், செயல் அதிகாரி, எஸ்.பி. உள்பட அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அதிகாரிகளையும், அறங்காவலர் குழுவை யார் நியமித்தது? பக்தர்களுக்கு சேவை செய்யும் எண்ணம் யாருக்கும் இல்லை. சேவை செய்யும் எண்ணம் இல்லாதவர்கலை நியமித்ததே இதற்கு காரணம். குறைந்தபட்ச வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகிறது. சந்திரபாபு நாயுடுவின் மோசமான நிர்வாகமே இதற்கு காரணமாகும். கோதாவரி புஷ்கரம் சமயத்தில் நடந்தது அனைவருக்கும் நினைவு இருக்கும். அதிலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
கைது செய்ய வேண்டும்:
சந்திரபாபு நாயுடுவின் திறமையற்ற நிர்வாகத்திற்கு இது மற்றொரு உதாரணம். தெலுங்கானாவில் புஷ்பா பட சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததற்காக, அதற்கு காரணமானவர் என்று குற்றம்சாட்டி அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல இந்தச் சம்பவத்தில் சந்திரபாபு முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை தற்செயலான விபத்து என குறிப்பிட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதை ஏற்க முடியாது.
ஒன்றுமே நடக்காத திருப்பது லட்டு விவகாரத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக சொல்லி பாஜக, தெலுங்கு தேச தலைவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் ததெரியும். லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை மேற்கொண்ட பவன் கல்யாண் இந்த சம்பவத்திற்கும் தீட்சை மேற்கொள்வாரா அல்லது சந்திரபாபுவை ராஜினாமா செய்ய வைப்பாரா? கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று அவர் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications