திருப்பூரில் போலீஸ்காரர்களா இப்படி செய்தது.. விபச்சார புரோக்கர் மனைவியால் வெளிவந்த உண்மை
திருப்பூர்: திருப்பூர் கோவில்வழியைச் சேர்ந்தவரை காரில் சிலர் கடத்தி செல்வதாக வந்த தகவலை அடுத்து விரைந்து சென்று கடத்தி சென்றவரை போலீசார் நேரில் சென்று மீட்டனர். மீட்கப்பட்டவர் விபச்சார புரோக்கர் என்பதும், அவரை கடத்தி தாக்கியது போலீஸ்கார்கள் என்பதும், அவரிடம் 2 லட்சம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. 3 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கோவில்வழியைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் பெருமாநல்லூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவரை 6 பேர் கும்பல் காரில் கடத்தி சென்றதாகவும், அதில் சிலர் போலீஸ் சீருடையில் இருந்ததாகவும் கூறினார். இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கடத்தப்பட்ட நபர் விபசார புரோக்கர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இணைய தளத்தின் மூலம் அவர் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்பதும், இதனை அறிந்த 3 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர், விபசார தொழில் குறித்து வெளியே சொல்லாமல் இருக்க தங்களுக்கு ரூ,2 லட்சம் பணம் தர வேண்டும் எனக்கூறி தாக்கியதுடன், காரில் அவரை கடத்திச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு விபச்சார புரோக்கரை கடத்தி சென்று அங்குள்ள அறை ஒன்றில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவரது மனைவி அளித்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு விபச்சார புரோக்கரை உடனடியாக மீட்டனர்.
விபசார புரோக்கரை கடத்தி பணம் பறிக்க முயன்ற குற்றத்திற்காக திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சோமசுந்தரம் (வயது 31), கோபால்ராஜ் (33), நீலகிரி மாவட்டம் தேவாலா சோலூர் மட்டத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் லட்சுமணன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்களின் நண்பர்கள் ஜெயராம் (20), ஹரீஸ் (25), அருண்குமார் (24) ஆகிய 3 பேரை கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் 3 பேரும் 2011-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட விபசார புரோக்கர் மூலம் சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல், ராசிபுரத்தில் இணைய தளம் மூலம் நடந்து வந்த விபசார தொழில் குறித்து கண்காணித்து, அதனை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications