திருப்பூரில் மது பழக்கத்தைவிட மறுத்த தந்தை.. மதிமயங்கி பேசிய வார்த்தை.. கிணற்றில் குதித்த மாணவி
திருப்பூர்: திருப்பூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் பள்ளி மாணவி கிணற்றில் குதித்து உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூக பிரச்சனையாக குடிப்பழக்கம் உருவாகி வருகிறநது. பலரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு, வேலைக்கு சரிவர செல்லாமல் குடும்பத்தை வறுமையில் தள்ளிவருகிறார்கள். கூலி வேலை செய்யும் பலரது குடும்பங்கள் இதனால் கலங்கி போய் நிற்கின்றன.
திருப்பூரை பொறுத்தவரை தமிழ்நாட்டின் பனியன் தொழிலின் தலைநகரம் என்று சொல்லலாம். திருப்பூரில் அவ்வளவு தொழில் நிறுவனங்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் யார் வந்தாலும் உடனே வாரி அணைத்துக் கொண்டு, வீடு கொடுத்து , உணவு கொடுத்து, வேலையும் கொடுக்கும் ஊர். திருப்பூர் போய் பிழைக்க முடியாதவர், தமிழ்நாட்டில் எங்கு போனாலும் பிழைக்க முடியாது என்று சொல்வார்கள்.. அது முழுக்க முழுக்க உண்மை. இங்கு படித்தவர்கள் தான் வேலைக்கு சேர முடியும் என்கிற நிலை இல்லை...யார் வந்தாலும் தொழில் திறமைகளை கற்றுக்கொண்டு அடுத்த சில ஆண்டுகளிலேயே நல்ல நிலைக்கு வந்துவிட முடியும்.

சொந்த ஊரில் கடனில் மூழ்கி ஊரை விட்டு வந்தவர்கள்.. பூஜியத்தில் வாழ்க்கையை ஆரம்பித்த பலர் தான் திருப்பூரில் கோடீஸ்வரர்கள்.. திருப்பூர் என்பது தொழிலாளர்களின் நகரம். தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் திருப்பூரில் உள்ள வேலையை நம்பித்தான் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இது எந்த அளவிற்கு உண்மையோ.. அதே அளவிற்கு இன்னொரு உண்மையும் திருப்பூரில் இருக்கிறது. பலர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சம்பாதிக்கும் பணத்தை மதுக்கடைகளில் போய் கொட்டுகிறார்கள்.
இதன் காரணமாக கஷ்டப்பட்டு உழைத்தும் முன்னேற முடியாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றன. தினமும் மது அருந்துவது. சனிக்கிழமை சம்பளம் வாங்கிய உடன் டபுளாக மது அருந்துவது, ஞாயிறுகளில் முழுமையாக மது அருந்துவது, திங்கள் அன்று வேலைக்கு செல்ல முடியாமல் தலைவலியில் உறங்குவது அல்லது சரியாக வேலை செய்யாமல் தவிப்பது என்பது பலருக்கு தொடர்கதையாக உள்ளது. குடிப்பழக்கத்தால் உடல் நலம் மற்றும் குடும்ப உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அடிக்கடி சண்டை, உறவுகளை சந்தேகப்படுவது, குடித்துவிட்டு கேள்வி கேட்டால் அடிப்பது.. வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் நடந்த சோகத்தை பற்றி பார்ப்போம்.
திருப்பூர் காங்கயம் ரோடு, விஜயாபுரத்தை அடுத்த மருதப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதாகும் வீரப்பன் என்பவருடைய மகள் சாதனா (14). இவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான சாதனாவின் தந்தை வீரப்பன் மது போதையில் வந்து குடும்பத்தில் தினமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சாதனா வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பியிருக்கிறார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த வீரப்பன் தகராறு செய்தாராம்.
இதனால் மனவேதனை அடைந்த சாதனா, தந்தையிடம் குடிப்பழக்கத்தை கைவிடும்படி கேட்டிருக்கிறார். அப்போது அவர் மகளை போதையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாதனா, விஜயபுரம் கருப்பராயன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, அவரின் உடலை தேடினர். இரவு வெகுநேரமாகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது நேற்று காலை மீண்டும் தேடும் பணி நடந்தது. இதில் மாணவி சாதானாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் குடிப்பழக்கத்தால் மகள் உயிரைவிட்ட சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications