6 வயது மூத்த பெண்ணுடன் காதல்.. கல்யாணத்திற்கு குறுக்கே நின்ற பெற்றோரை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞன்
திருப்பூர்: வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞரை அவரது குடும்பத்தினர் மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், அவர் குடி போதையில் தனது பெற்றோரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் - பெண் உறவு குறித்த சரியான புரிதல்கள் குடும்பங்களிலும், சமூகத்திலும் இல்லாததன் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக உளவியல் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

காதலாக மாறிய நட்பு
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கபுரத்தை சேர்ந்த 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக நட்பாக பேசி வந்துள்ளனர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதுகுறித்து அவர்களது நண்பர்கள் இருவரையும் எச்சரித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் இது குறித்து பெரிதாக காதில் வாங்கிக்கொள்ளவில்லை. நட்பில் தொடங்கிய உறவு முறை காதலாக பரிணமித்ததையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

தாக்குதல்
ஆனால் இருவரின் வீட்டிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு எழவே என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளனர். பின்னர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் இருவரின் வீட்டிலும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரையும் தேடிக் கண்டுபிடித்த பெற்றோர்கள் தனித்தனியாக இருவரையும் தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதனால் அந்த இளைஞர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நிலைமை இவ்வாறு இருக்கையில் இளைஞர் மது போதையில் தனது பெற்றோர் மீது பீர் பாட்டில் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

யதார்த்தம்
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வயதில் மூத்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில் சாமானியர்கள் மத்தியிலும் இந்த கலாச்சாரம் மெல்ல கிளை விடத் தொடங்கியுள்ளது. பொதுவாக திருமண வாழ்க்கையில் தன்னை விட பல வயது குறைவாக உள்ள பெண்களை ஆண்கள் திருமணம் செய்துகொள்ளும் மரபு இன்றும் இந்தியாவில் நீடித்து வருகிறது. ஆனால், வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்வது அரிதாகவே நடக்கிறது.

ஜோதிடமும், அறிவியலும்
வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொள்வது குறித்து பல்வேறு கருத்துக்கள் நேர்மறையாக சொல்லப்பட்டாலும் அநேக திருமணங்கள் இவ்வாறு நடப்பதில்லை. ஆனால் ஜோதிடத்தில் 7ம் கட்டத்தில் சனி, அல்லது குரு இருப்பவர்களுக்கு வயதில் மூத்த பெண்ணுடன்தான் திருமணம் நடக்கும் என கணிக்கப்படுகிறது. இது குறித்து தவறு ஏதும் இல்லையென்றே சொல்லப்படுகிறது. உளவியல் ஆய்வாளர்களும் இந்த வகையான திருமணம் நேர்மறை தாக்கங்களையே ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். எனினும், சமூகத்தில் நிலவும் புரிதல் குறைபாடுகளால் பெற்றோர் இந்த விவகாரங்களை மிகவும் தீவிரத்தோடு அணுகுவது சிக்கல்களையே ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications