குடியால் குடும்பமே சீரழிகிறது! டாஸ்மாக் கடையை மூடுங்க! அமைச்சர் கயல்விழி காரை மறித்து பெண்கள் ஆவேசம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமைச்சர் கயல்விழி செல்வராஜின் காரை மறித்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆவேசம் காட்டினார்.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் சில்லரைக் கடைகள் மூடப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டதுடன் அதனை மூடியும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளில் தங்கள் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளும் உள்ளடங்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த பலரும் இப்போது போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் தாராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜின் காரை மறித்து நிறுத்தி குடியால் குடும்பம் சீரழிவதாக குமுறினார்கள். டாஸ்மாக் கடையை மூடுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் எனக் கேட்டு நகர மறுத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து பேசி தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கயல்விழி செல்வராக் எடுத்துக் கூறியும், குடியால் தங்கள் குடும்பம் என்னென்ன பாதிப்புகளை சந்தித்தது என பெண்கள் பட்டியல் போடத் தொடங்கினர்.

காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினரும், உள்ளூர் திமுகவினரும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அமைச்சர் காருக்கு வழிவிட்டனர். இதனிடையே பெண்கள் திடீரென காரை மறித்து நிறுத்தியதால் பதற்றமடைந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது காரை விட்டு கீழே இறங்குவதை தவிர்த்திருந்தார்.
தாராபுரத்தை போலவே பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டங்கள் நடக்க ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications