திருப்பூரில் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி.. வீட்டிலேயே நினைத்து பார்க்க முடியாத சம்பவம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி.இவரிடம் கரடிவாவி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் வடுகபாளையம் பகுதியில் நிலத்திற்கான பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலரான முத்துலட்சுமி 30 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், பட்டா மாற்றம் செய்வதற்கு லஞ்சம் கேட்கிறார் என்றால், அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சட்டவிரோதமான செயல். பட்டா மாற்றம் என்பது அரசு சேவை, இதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர வேறு எந்தப் பணமும் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை..

வழக்கு தொடர அனுமதி
ஆனால் துரதிஷ்டவசமாக சில அரசு ஊழியர்கள் புரோக்கர்களுடன் சேர்ந்து கொண்டு தைரியாக லஞ்சம் வாங்குவது நடக்கிறது. அதேநேரம் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக கைதான போதிலும், அவர்கள் மீது வழக்கு தொடர அரசு அனுமதித்து கடும் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதுதான் அரசு ஊழியர்கள் தைரியமாக லஞ்சம் வாங்க காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சேவை உரிமை சட்டம் கொண்டுவரவும் அரசு தயங்குவதும் லஞ்சம் அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது.
காலக்கெடு நிர்ணயம்
மத்தியப் பிரதேசம், பீகார், டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் சேவை உரிமை சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டப்படி அரசு அலுவலகங்கள் வழங்கும் ஒவ்வொரு சேவைக்கும் (உதாரணமாக, சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், பிறப்புச் சான்றிதழ்) ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.சேவை பெறுவது என்பது அரசின் சலுகை அல்ல, அது குடிமகனின் உரிமை என்று சேவை உரிமை சட்டம் உறுதி செய்யும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சேவை வழங்கப்படாவிட்டால், குடிமகன் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்க முடியும்.
அபராதம் விதிக்கப்படும்
சரியான காரணமின்றிச் சேவையை வழங்கத் தாமதிக்கும் அல்லது மறுக்கும் பொறுப்பான அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்படும்.அபராதத் தொகை பாதிக்கப்பட்ட குடிமகனுக்கு இழப்பீடாக வழங்கப்படும். இந்த அபராதம் அரசு ஊழியரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும்.. இந்த சட்டம் இன்று வரை தமிழ்நாட்டில் கொண்டுவரப்படவில்லை. இதுவும் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் பயம் இல்லாமல் செயல்பட காரணமாக உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
30 ஆயிரம் லஞ்சம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி.இவரிடம் கரடிவாவி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் வடுகபாளையம் பகுதியில் நிலத்திற்கான பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலரான முத்துலட்சுமி 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறை
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கிருஷ்ணசாமி, இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளனர். கிருஷ்ணசாமி பணம் தருவதாக முத்துலட்சுமியிடம் தெரிவித்ததை தொடர்ந்து, வடுகபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு வர சொல்லியுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி கைது
வீட்டிற்கு சென்ற கிருஷ்ணசாமி முத்துலட்சுமியிடம் 20 ஆயிரம் பணம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர். வீட்டில் வைத்து லஞ்சம் வாங்கும் போது கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications