உடுமலைப்பேட்டை ரோட்டில் யார்னு பாருங்க.. நைட் நேரத்தில் வாக்கிங் போன விருந்தாளி.. திகைத்த திருப்பூர்
திருப்பூர்: திருப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளதுடன், முக்கிய கோரிக்கை ஒன்றும் வனத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் புயல் அடித்தது.. பெருத்த வெள்ளம் திரண்டது.. இதனால் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது.. புறநகர் பகுதிகளில் மக்கள் மழைநீரில் திணறிவிட்டார்கள்.

வெள்ள நீர்: புயல் மழை அடங்கியும், வெள்ளநீர் வடியாமல் இருந்தது.. அப்போது, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில், வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது.. இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் பதறிப்போய்விட்டார்கள்.. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது.
அங்குள்ள ஏரி பகுதிகளில் இருந்து முதலை தவறி சாலைப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றார்கள்.. ஆனால், அந்த முதலை ரோடு கிராஸ் செய்து, அந்த பகுதியிலிருக்கும் தண்ணீருக்குள் சென்றுவிட்டது. அதற்குபிறகு வெளியே வரவில்லை.
5 முதலைகள்: இது சென்னைவாசிகளுக்கு தைரியம் தந்திருந்தது என்றாலும், இதற்கு பிறகு, ஆலப்பாக்கத்தில் மறுபடியும் ஒரு பெரிய முதலை சாலையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்ததை பொதுமக்கள் பயந்துவிட்டார்கள். இப்படியே மொத்தம் 5 முதலைகள் சென்னையின் சாலைகளில் நடமாடிக் கொண்டிருந்தன. இவைகளையெல்லாம் வனத்துறையினர் பிடித்து கொண்டுபோய், கிண்டி பூங்காவிற்கு கொண்டு போய் பத்திரமாக விட்டுவிட்டு வந்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் ஒரு முதலையை சாலையில் ஹாயாக சென்றுள்ளதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.. உடுமலை பகுதியை சுற்றிலும் நிறைய வனப்பகுதிகள் உள்ளன.. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டு மாடுகள், மான்கள் போன்ற விலங்குகள் உள்ளன.. அதேபோல, உடுமலை பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றின் அருகே அமராவதி முதலைப்பண்ணை அமைந்துள்ளது.
பண்ணை முதலை: இந்த பண்ணையில் 10 தொட்டிகளில் முதலைகள் இயற்கையான சூழலில் வளர்க்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, நூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர் முதலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.. எனவே, அடிக்கடி அமராவதி ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் தென்படும். ஆனால், ரோட்டிலேயே முதலை ஒன்று சாலையில் நடந்து போயிருக்கிறது.
உடுமலை அருகே மடத்துக்குளம் அடுத்துள்ள கொழுமம்-பழனி சாலை.. இங்கு குதிரையாறு வாகன சோதனை மையம் அமைந்திருக்கிறது.. இந்த ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும வந்து செல்லும். அப்படித்தான், சம்பவத்தன்று இரவு ஒரு கார் வந்துள்ளது..
அது என்ன உயிரினம்: அந்த காரில் இருந்தவர்கள்தான், சாலையில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றதை கவனித்திருக்கிறார்கள். இரவு நேரத்தில் மெல்ல நகர்ந்து போனதால், அதை பார்த்து பாம்பு என்று நினைத்து முதலில் பயந்துவிட்டார்கள். பிறகுதான், சந்தேகம் அடைந்து காரில் இருந்த லைட் வெளிச்சத்தை திருப்பி பார்த்திருக்கிறார்கள்... அந்த முதலை சாவகாசமாக சாலையில் நடந்துபோயுள்ளது..
வீடியோ: உடனடியாக செல்போனில் வீடியோ எடுத்து, இணையத்திலும் பகிர்ந்துள்ளார்கள். மழைக்காலம் முடிந்து வெயில் மண்டையை பிளந்து வரும்நிலையில், இந்த நேரத்தில் முதலை வருகிறதே என்ற ஆச்சரியம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. அதுவும் இல்லாமல், ஊருக்குள்ளேயே முதலை வந்துவிட்டதே என்ற பீதியும் பொதுமக்களிடம் கிளம்பி உள்ளது.
முதலை நடமாட்டம் உறுதியாகிவிட்டதால், அந்த சாலையில் வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதலை எங்கே: மேலும், அந்த முதலையை எப்படியாவது கண்டுபிடித்து, உடனடியாக அதை வேறு பகுதியில் கொண்டுபோய் விட வேண்டும் அல்லது அமராவதி முதலைப் பண்ணைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு இந்த முதலையை சாலையில் பார்த்துள்ளனர்.. இப்போது அந்த முதலை எங்கிருக்கிறது என்று தெரியவில்லை..!!












Click it and Unblock the Notifications