மயிலாப்பூர்ல சர்ச்.. கோயிலின் மீது மசூதி.. திமுக வந்ததிலிருந்தே "தரைமட்டமாயிருச்சு".. யார்னு பாருங்க
திருப்பூர்: தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசியதாக, அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தற்போது நடந்து வருகிறது. நேற்றைய தினம் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 108 புதிய அறிவிப்புகளை அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டிருந்தார்.
அப்போது, கேள்விக்கு ஒன்றுக்கு சேகர் பாபு பதிலளித்து பேசும்போது, "இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் கோயில்கள் அதிகம்.. கோயில்களை வைத்து கலை வளர்த்ததாகவும், கலவரத்தை வளர்க்கவில்லை.. கடவுளை கோவிலில் வைத்து வணங்குங்கள், ஆனால் பிரச்சாரத்திற்கு அழைத்து வராதீர்கள்.

இறைவனிடம் வரம் கேளுங்கள், ஆனால் இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும்" என்று கூறியிருந்தார்.
சேகர் பாபு: தமிழகத்தில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்ததற்குதான், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"கோவில்களை தமிழர்கள் கலவரமாக பார்க்காமல், கலையாக பார்த்ததால் கோவில் நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் பேசியுள்ளார். எந்த சட்டசபையில் நின்று இவர் பேசுகிறாரோ, அந்த இடத்தில் தான் சென்னை மல்லீஸ்வரர் கோவில், சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகியன இருந்தன. இவற்றை ஆங்கிலேயர்கள் இடித்து தான் ஜார்ஜ் கோட்டையை கட்டினர்.
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கடலையொட்டி இருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்து அங்கு கட்டப்பட்டது தான் செயின்ட் தாமஸ் சர்ச். இப்போது உள்ள கோவில் அதன்பின் கட்டப்பட்டது. பல கோவில்களை, மதவெறி பிடித்த ஆங்கிலேயர்கள் இடித்த வரலாறு உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், ஸ்ரீரங்கமும் 40 ஆண்டு முகலாயர்களின் ஆக்கிரமிப்பால் மூடி கிடந்த சரித்திரம் அமைச்சருக்கு தெரியாது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.
மசூதி, தர்கா: முகலாய ஆக்கிரமிப்பாளர்கள் தமிழகத்தில், 300 கோவில்களை இடித்து மசூதி, தர்கா கட்டியதற்கு ஆதாரப்பூர்வமான பட்டியல் இருக்கிறது. இஸ்லாமிய படையெடுப்பாளர்களை பக்தி நெறியோடு வாழ்ந்த தமிழ் மன்னர்களும், பாளையக்காரர்களும், வடக்கே இருந்த மன்னர்களும் விஜயநகர பேரரசும், மராட்டிய வீரசிவாஜி மற்றும் வம்சத்தவர்களும், தடுத்து நிறுத்தியதால் தான் தமிழக கோவில்கள் காப்பாற்றப்பட்டன என்பதை, சேகர்பாபு மறக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications