குழந்தைகளை பள்ளி பேருந்தில் அனுப்பிய போது விபரீதம்.. அதே பள்ளி பேருந்தால் துடிதுடித்து இறந்த தாய்
திருப்பூர்: திருப்பூர் கூலிபாளையம் நால்ரோடு அருகில் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் மீது அதே பள்ளியின் பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த தாய், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்து ஆவேசம் அடைந்த உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மண்ணரை பாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் 41 வயதாகும் செல்வராஜ் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவருடைய மனைவி ராதா (32). இவர்களுக்கு மனோஜ் (15) என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், ரித்திகா (12) என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கிறார்கள்.

ராதா நேற்று காலை திருப்பூர் கூலிபாளையம் நால்ரோடு அருகில் உள்ள தனியார் பள்ளியில் தனது மகன், மகளை விடுவதற்காக ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் இருவரையும் பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தள்ளார்
அப்போது கூலிபாளையம் நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில், பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த அதே பள்ளியின் பேருந்து எதிர்பாராத விதமாக ராதாவின் ஸ்கூட்டரை இடித்து தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த ராதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் ராதாவின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் உயிரிழந்த ராதாவின் உறவினர்கள் திரண்டு உரிய நியாயம் வேண்டும் என வலியுறுத்தி ராதாவின் உடலை அப்புறப்படுத்த விடாமல் போலீசாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் போலீசார் சமாதானம் செய்து ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications