"அடிக்காதீங்க அண்ணா" கதறிய மனைவி! இலவச டீ க்கு ஆசைப்பட்டு பயணியை தாக்கிய திருப்பூர் அரசு பஸ் டிரைவர்
திருப்பூர்: திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில், இலவச டீ மற்றும் வடைக்கு ஆசைப்பட்டு தரமற்ற ஓட்டலில் பேருந்தை நிறுத்தியிருக்கிறார்கள் ஓட்டுநரும் நடத்துநரும்.. இதுகுறித்து கேள்வி கேட்ட பயணியை, அவரது மனைவி மற்றும் மகள் கண் முன்னே சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. "அடிக்காதீங்க அண்ணா" என்று அந்தப் பயணியின் குடும்பத்தினர் கதறி அழுத நிலையிலும், அரசு ஊழியர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது திருப்பூரில்?
வழக்கமாக நெடுஞ்சாலை உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும்போது, அங்குள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு டீ, வடை போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்ற ஒரு பேச்சு நீண்ட நாட்களாகவே உண்டு.

அதற்கு கைமாறாக, அந்த கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை கூடுதலாக இருந்தாலும் பேருந்துகள் அங்கேயே நிறுத்தப்படுவதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.
திருப்பூர் அரசு பஸ் - இலவச டீ காபி
இந்நிலையில் திருப்பூரிலிருந்து கரூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது.. இந்த பேருந்து தென்னிலை அருகே நின்றபோது, அங்கு ஒரு டீ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பொதுவாக வெளியில் 15 ரூபாய்க்கு கிடைக்கும் டீயை விட, இங்கு 10 ரூபாய் கூடுதலாக இருப்பதை கண்ட பயணி ஒருவர் அதிர்ச்சியடைந்தார். தனது மனைவி மற்றும் மகளுடன் பயணம் செய்த அவர், இதுகுறித்து டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினார்.
"டீ 15 ரூபாய்க்கு விற்கிற கடையில் நிறுத்தாமல், ஏன் இப்படி அதிக விலைக்கு விற்கிற கடையில் நிறுத்துறீங்க? உங்களுக்கு இலவசமாக டீ, வடை கிடைக்கிறது என்பதற்காகவா? இப்படி தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடையில் பஸ்ஸை ஏன் நிறுத்துறீங்க? என்று சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதிர்ச்சியில் பயணிகள்
இந்த கேள்வியை டிரைவரும், கண்டக்டரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. இது அவர்களை ஆத்திரமடையவும் செய்தது. இதனால் பயணியிடம் பதில் வாக்குவாதம் செய்தனர்.. வாக்குவாதம் முற்றிய நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த பயணியை அவரது மனைவி மற்றும் மகள் முன்னிலையிலேயே டிரைவரும், கண்டக்டரும் சேர்ந்து சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
இதை பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியைடந்ததுடன், இந்நிகழ்வை செல்போனிலும் வீடியோ எடுத்துள்ளனர்.. ,இந்த வீடியோதான் காட்டுத் தீயாய் இணையத்தில் பரவி கொண்டிருக்கிறது.
அண்ணா அடிக்காதீங்க
அந்த வீடியோவில், தன் கணவரை அடிப்பதை கண்டு பதறிப்போன அவரது மனைவியும், சின்னஞ்சிறு மகளும், "அடிக்காதீங்க... அண்ணா அடிக்காதீங்க..." என்று கதறி அழுது கெஞ்சும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. குடும்பத்தினர் கண் முன்னே ஒரு பயணியை அரசு ஊழியர்கள் தாக்கியது பேருந்தில் இருந்த மற்ற பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இ0ந்த வீடியோ இணையத்தில் காட்டுத் தீயாக வைரலாகி வரும் நிலையில், "மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசு பேருந்து ஊழியர்களே வன்முறையில் ஈடுபடுவது சரியா?" என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இலவச சலுகைகளுக்காக பயணிகளை அவதிக்குள்ளாக்கும் ஊழியர்கள் மீதும், அந்த உணவக நிர்வாகம் மீதும் போக்குவரத்து கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன...!!












Click it and Unblock the Notifications