திருப்பூரில் மலை போல் குவிந்த குப்பைகள்.. வடமாநில தொழிலாளர்கள் பொங்கி எழுந்ததன் பின்னணி
திருப்பூர்: திருப்பூருக்கு குப்பையை அகற்றி அதனை மேலாண்மை என்பது சவலான காரியமாக இருக்கிறது. எங்கு குப்பையை கொட்ட சென்றாலும், அந்த பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தற்போது ஏற்கனவே குப்பை கொட்டி வந்த இடங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படித்தான் திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் இறங்கினார்கள். பலர் கைது செய்யப்பட்டர். தங்கள் குடியிருக்கும் பகுதியை காக்க களத்தில் இறங்கியது எல்லாமே வடமாநில தொழிலாளர்கள் ஆவர்.
திருப்பூர் மாநகராட்சியை போல் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்த ஒரு ஊர் இல்லை.. ஏனெனில் ஒருகாலத்தில் கோவை மாவட்டத்தில் இருந்து ஒரு சராசரியான ஊர் தான் திருப்பூர். ரயில் பாதையும் பனியன் தொழிலும் திருப்பூரை உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது. திருப்பூர் மாநகரத்திற்குள் 2005க்கு முன்பு சென்றிருந்தால், ஓரளவே நகரம் பெரிதாக இருந்திருக்கும். ஆனால் கடந்த 20 வருடங்களில் திருப்பூர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

திருப்பூரின் வளர்ச்சி
திருப்பூர் மாநகரம், பக்கத்தில் உள்ள பெரிய ஊரான ஈரோட்டை விடவும் பெரிதாக வளர்ந்துவிட்டது. அதேபோல் கோவைக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. திருப்பூர் மாநகரம் மேற்கே அவினாசி வரையிலும், தாராபுரம் சாலையில் கொடுவாய் வரையிலும், அந்த பக்கம் பெருமாநல்லூர் வரையிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இது இல்லாமல் ஊத்துக்குளி சாலை, காங்கேயம் சாலை, மங்கலம் ரோடு என எல்லா பக்கமும் நகரமும் முழுமையாக வளர்ந்துவிட்டது. மாநகரம் வேகமாக வளருவதற்கு ஏற்ப உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது சவலாக உள்ளது. குறிப்பாக குப்பைகளை அகற்றுவது என்பது சவாலாக இருக்கிறது.
திருப்பூரில் குப்பை கொட்டுவது எங்கே
ஏனெனில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்பு பாறைகுழிகளில் கொட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்போது திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் எங்கு சென்று குப்பையை கொட்டினாலும் அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் குப்பை கொட்ட இடம் கிடைக்காமல் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி
இந்த நிலையில் திருப்பூர் 25-வது வார்டு சிறுபூலுவப்பட்டியில், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டப்பட்டு வந்தது, இதனால் அங்கு குப்பை குவிந்து காணப்படுவதுடன், கடுமையான துர்நாற்றமும் வீச தொடங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
பனியன் தொழிலாளர்கள் போராட்டம்
இந்தநிலையில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அருகில் உள்ள பனியன் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 25-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் முகக்கவசம் அணிந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தொழிலாளர்கள் மறியல்
இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் கவுதம், உதவி கமிஷனர் பிரதீப்குமார், இன்ஸ்பெக்டர்கள் பிரேமா, இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இதில் மொத்தம் 100க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தள்ளுமுள்ளு
வேனில் ஏற்றியபோது போலீசாருக்கும், சில தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது. கைதான அனைவரையும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவித்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது












Click it and Unblock the Notifications