பட்டா வாங்குவோருக்கு இனிப்பான செய்தி... நில அளவீடு இப்போது மிக எளிது.. திருப்பூர் கலெக்டர் தகவல்
திருப்பூர்: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில் வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய வசதி செயல்பாட்டில் இருக்கிறது. அதை பயன்படுத்தி எளிதாக பட்டா வாங்குவோர் விண்ணப்பிக்க இயலும்.. இதுபற்றி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.
இன்றைக்கு நிலத்தை அல்லது இடத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வோர், நில அளவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து பட்டா வாங்க வேண்டும்.நில அளவையில் தவறு நடந்தால், அது காலத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தும்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தான் நிவாரணம் பெற வேண்டியதிருக்கும். தீர்ப்பு வர காலங்கள் ஆகும் என்பதால் பெரும் மனஉளைச்சலும் ஏற்படும். எனவே நில அளவை விஷயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில் வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizenஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த சேவையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களின் நான்கு எல்லைகளை அளவை செய்ய பொது சேவை மையங்களை தொடர்பு கொண்டு நில அளவை கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க முடியும்.
நில அளவை செய்யப்படும் தேதி, மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் மூலமாக தெரிவிக்கப்படும். மேலும் நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம், நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். https://eservices.tn.gov.in/என்ற இணையதளத்தின் மூலமாக மனுதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்." இவ்வாறு கூறியுள்ளார்.
இதனிடையே கிராம நத்தம் நில ஆவணங்களை,ஆன்லைன்' முறைக்கு மாற்றும் போது குழப்பங்களை தவிர்க்க, தேவையான இடங்களில் புதிய சர்வே எண் ஒதுக்க வருவாய்துறை முடிவு செய்திருக்கிறது. தற்போதைய நிலையில் கிராம நத்தம் உள்ளிட்ட சிலவகை நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள், இன்னும், 'மேனுவல்' முறையிலேயே இருக்கிறது.இதனால் அடிக்கடி குழப்பம் ஏற்படுகிறது.
இந்த ஆவணங்களும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. இதன்படி நத்தம் நிலங்களுக்கு தனி வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான கிராமங்களில், நத்தம் நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும், வழக்கமான பட்டா நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும் பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது தேவையான இடங்களில் புதிய சர்வே எண் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications