"ஆமா! யாரு நீ!" பானி பூரி கடையில் வடமாநிலத்தவர் மீது தாக்குதல்! குடிபோதை கும்பலால் திருப்பூரில் பரபர
வடமாநில இளைஞர் மற்றும் தமிழக இளைஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையம் அருகே வடமாநில தொழிலாளர் மற்றும் தமிழக இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வடமாநில இளைஞருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தென்மாநிலங்களுக்கு வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநில இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
நமது மாநிலத்திலும் ஹோட்டல், கட்டிட வேலை செய்யும் ஊழியர்களுக்குப் பற்றாக்குறை இருக்கவே செய்கிறது. இதனால் இந்த தேவையை நிரப்ப வடமாநில இளைஞர்கள் இயல்பாகவே தேவைப்படுகிறார்கள்

வடமாநில இளைஞர்கள்
மேலும், தமிழ்நாட்டில் பலரும் கல்லூரி வரை படிப்பதால், ஊதியம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். மேலும், தமிழக இளைஞர்கள் இதுபோன்ற வேலைகளில் சேர ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது இதன் காரணமாகவே வடமாநில இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதாக நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வடமாநில இளைஞர்களால் தான் தமிழர்களின் வேலை பறிபோவதாகத் திட்டமிட்டு ஒரு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

தப்பில்லை
பொதுவாகவே வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தைப் பொறுத்தே தொழிலாளர்கள் ஒரு இடத்திற்குச் செல்வார்கள், உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால்.. இந்தியர்கள் குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக ஊதியம் காரணமாகச் செல்கிறார்கள். இப்படி தான் வடமாநிலத்தவர் இங்கு வருவதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

பிழைப்பு தேடி வரும் இளைஞர்கள்
இங்கு வந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்பதாலும் அங்குடன் ஒப்பிடும் போது ஊதியம் அதிகம் என்பதாலும் இதுபோல வடமாநிலத்தவர் இங்கு அதிகம் வருகிறார்கள்.. அதேநேரம் பிழைப்பு தேடி இங்கு வரும் வடமாநிலத்தவர்களைக் குறிவைத்து இங்கு மோசமான வெறுப்பு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சமீப காலங்களில் வடமாநிலத்தவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

தாக்குதல் சம்பவங்கள்
சமீபத்தில் கரூரில் வடமாநில இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேருந்து நிலையத்திலேயே தாக்குதல் நடைபெற்றது. அதேபோல கோவையில் தனியார் கல்லூரியில் உணவு பிரச்சினையில் அங்கு பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதேபோல ரயிலில் வடமாநில இளைஞரை இளைஞர் ஒருவர் தாக்கிய பகீர் சம்பவமும் நடந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இப்போது மீண்டும் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூரில் ஷாக்
திருப்பூரில் தங்கியுள்ள வடமாநில இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பல்லடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே பானி பூரி கடையில் வடமாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்குள்ள வட மாநில இளைஞரும், தமிழக இளைஞர்களும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வடமாநில இளைஞருக்குத் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது
பல்லடம் பேருந்து நிலையத்தில் இருக்கும் பானி பூரி கடையில் தமிழக இளைஞர்கள் சிலர் பானி பூரி சாப்பிடச் சென்றுள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. பானி பூரி சாப்பிட்ட அந்த இளைஞர்கள் காசு கொடுக்காமல் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது அப்படியே அடிதடியாக மாற இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் பப்பு என்ற அந்த வடமாநில இளைஞருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications