"ஹை அலர்ட்" மோடில் கோவை போலீஸ்.. நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி! வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்
திருப்பூர்: இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில், இதற்காக மாநிலத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்க்க என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு நாளை திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடக்கிறது.

இந்த நிகழ்வில் நேரடியாக நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இந்த யாத்திரை நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நளை பிப்ரவரி 27 தமிழகம் வருகிறார்.
திருப்பூரில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தைப் பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், இதற்காக மாதப்பூர் கிராமத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானத்தை ரெடி செய்துள்ளனர். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாஜக சார்பில் தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய பொதுக்கூட்டமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்காக நாளை கோவை சூலூர் விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். தொடர்ந்து அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்த கொள்கிறார். அங்கே பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றும் பிரதமர் மோடி, அங்கிருந்து மதுரை செல்கிறார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் மோடி, அன்றிரவு மதுரையில் தங்குகிறார். அப்போது அவர் தமிழக பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து நாளை மறுநாள் தூத்துக்குடிக்குச் செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு நெல்லை செல்லும் அவர், பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, கேரள செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை பகுதிகளில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் வரும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக முதலில் பொதுக்கூட்டம் நடைபெறும் திருப்பூரில், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பாதுகாப்பாக வந்து செல்ல போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications