இரவில் கொட்டித் தீர்த்த பேய் மழை.. வீடுகளை சூழ்ந்த இடுப்பளவு மழைநீர்..அவதியில் திருப்பூர் மக்கள்!
திருப்பூர்: திருப்பூரில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை வரை பெய்த கன மழையால், பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஒரே இரவில் 15 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கனமழையால் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

கனமழை
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் அடுத்த ஏழு நாட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருப்பூரில் வெளுத்து வாங்கிய மழை
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் பெய்ய துவங்கிய மழை இன்று காலை 6 மணி வரை வெளுத்து வாங்கியது. திருப்பூர் மாநகரில் ஒரே நாள் இரவில் அதிகபட்சமாக 15 செமீ மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஒரே இரவில் 15 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மழையின் காரணமாக திருப்பூர் மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. அதன் காரணமாக, பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளை சூழந்த மழைநீர்
குறிப்பாக, திருப்பூர் அறிவொளி நகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான மக்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக, இப்பகுதி வெள்ளக்காடாக மாறி உள்ளது. மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்த எலக்ட்ரிக் பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தற்போது வரை, மின்சாரம் இவர்களுக்கு கிடைக்கவில்லை. குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் தேங்கியுள்ளதால், விஷ ஜந்துக்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கனமழையால் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். மின் மோட்டார்கள் மூலம் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மழைப்பொழிவு
திருப்பூர் வடக்கு பகுதியில் 110 மி.மீ, குமார் நகரில் 150 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 150 மி.மீ, பல்லடம் ரோட்டில் 131 மி.மீ, அவிநாசியில் 75 மி.மீ, ஊத்துக்குளியில் 120 மி.மீ, பல்லடத்தில் 28 மி.மீ, தாராபுரத்தில் 2 மி.மீ, உப்பாறு அணை பகுதியில் 10 மி.மீ, காங்கேயத்தில் 4.60 மி.மீ, திருமூர்த்தி அணைப்பகுதியில் 25 மி.மீ என்பது உட்பட மாவட்டம் முழுவதும் 777.60 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே நிலை நீடித்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்யும். குறிப்பாக, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமையான இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications