திருப்பூரில் பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி.. உடனடியாக ஸ்டாலின் போட்ட உத்தரவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம்-காங்கேயம் சாலை, குள்ளாய்ப்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவியையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் - காங்கேயம் சாலை, குள்ளாய்ப்பாளையம் பகுதியில் புதிதாக பாலம் ஒன்று கட்டப்படவுள்ளது. இந்த பாலம் கட்டுவதற்காக தாராபுரம் அருகே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பைக் விழுந்து நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் உயிரிழந்தனர். எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது பள்ளத்திற்குள் பைக் விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த அந்த தம்பதியின் மகள் படுகாயத்துடன் விடிய விடிய உதவி கேட்டு சத்தமிட்ட நிலையில் இன்று காலையில் கல்லூரி மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சூரியநல்லூர் கிராமம், சேர்வக்காரம்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 44) த/பெ.குழுந்தான் என்பவர் தனது மனைவி ஆனந்தி (வயது 38) மற்றும் மகள் தீட்சையா (வயது 12) ஆகியோருடன் நேற்று (3.5.2025) இரவு தனது இருசக்கர வாகனத்தை ஸ்டாண்டில் இருந்து எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு செல்லும் வழியில் தாராபுரம் காங்கேயம் சாலை, குள்ளாய்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் நாகராஜ் மற்றும் ஆனந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீட்சையா என்பவருக்கு சிற்ப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீக்ஷிதாவிற்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications