திருப்பூரில் ஷாக்.. லாரி மீது மோதிய கர்நாடகா அரசு பேருந்து.. ஓட்டுநர் பலி.. 30 பயணிகள் படுகாயம்
திருப்பூர்: சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு 3 மாநிலங்களை ஒருங்கிணைக்கும் பகுதி என்பதால் அங்கு அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் அதிகளவு செல்வது வழக்கம். அந்த வகையில் கர்நாடகா அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக சரக்கு லாரியின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் சாலை விபத்திற்கு காரணமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

சாலை விபத்து
நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் விபத்து அதிகரித்து கொண்டிருக்கிறது. முக்கியமாக சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால் திருப்பூர் மாவட்டம் அவிநாசி, பெருமாநல்லூர், செங்கப்பள்ளி பகுதிகளை ஒட்டி அதிக விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் கர்நாடகா அரசு போக்குவரக்கழகத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று, நேற்று இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
லாரி மீது மோதிய பேருந்து
நெடுஞ்சாலையில் கர்நாடகா அரசு பேருந்திற்கு முன்பாக ஒரு சரக்கு லாரி சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. லாரியை ஓவர்டேக் செய்வதற்காக முயற்சித்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தொடர்ந்து அந்த பேருந்து மீது லாரியின் பின் பகுதியில் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் நஞ்சுண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
மேலும், பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
முதல்கட்ட விசாரணையில், இரவு நேர பயணத்தின் போது ஓட்டுநர் நஞ்சுண்டன் கண்ணயர்ந்ததே இந்த விபத்திற்கு காரணம் என முதல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி மீது பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications