திருப்பூரில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அல்ல, ரூ.20.. டாஸ்மாக்கில் மாற்றம்.. மது குடிப்போர் அதிருப்தி
திருப்பூர்: திருப்பூரில் காலி பாட்டிலை கொடுத்து பத்து ரூபாய் திரும்பப்பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே அதிகபட்ச விற்பனை விலையில் பாட்டிலுக்கான விலையும் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது மது குடிப்போரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாயை வைத்தே பாட்டிலை திரும்ப தர டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று மது குடிப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும், சாலைகள் மற்றும் வனப் பகுதிகள் என கண்ட இடங்களில் காலி மது பாட்டில்களை குடிமகன்கள் வீசுவதைத் தடுப்பதற்காகவும், காலி மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கும்போது, அதன் அதிகபட்ச சில்லறை விலையுடன் (எம்ஆர்பி) கூடுதலாக ரூ. 10 சேர்த்து வசூலிக்கப்படும் என்றும், மது அருந்திய பிறகு, அந்தக் காலி பாட்டிலை டாஸ்மாக் கடையில் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட பார்களில் திரும்ப ஒப்படைக்கும்போது, குடிமகன்கள் செலுத்திய கூடுதல் ரூ. 10 உங்களுக்குத் திரும்ப வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த திட்டம் அண்மையில் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வந்தள்ளது.

அதன்படி, திருப்பூரில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் விற்பனைசெய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டில்களையும் விற்பனை செய்யும் போது அதிக பட்ச சில்லரை விற்பனை விலையுடன் சேர்த்து கூடுதலாக ரூ-10/-வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படுகிறது. அவ்வாறு வாடிக்கையாளர்கள் மதுபான கடைகளில் இருந்து வாங்கும் மதுபாட்டில்களை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு அதே மதுபானக் கடையில் காலியாக திரும்ப ஒப்படைக்கும் போது ஏற்கனவே பெறப்பட்ட ரூ-10/- திரும்ப வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது,
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே நேற்று முன்தினம் அறிக்கை விட்டு இருந்த நிலையில் நேற்று திருப்பூரில் செயல்படும் 225 டாஸ்மார்க் மதுபான கடைகளிலும் அமலுக்கு வந்தது. இது தொடர்ந்து நேற்றைய தினமே நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து அதற்கான தயாரிக்கப்பட்ட பிரத்தியேக ஸ்டிக்கர்கள் அனைத்தும் கடைகளுக்கு வழங்கப்பட்டு இன்று விற்பனையாகும் பொழுது மதுபாட்டில் உடன் ஸ்டிக்கர் ஒட்டி மது பிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
குடித்த காலி பாட்டில்களை உடனுக்குடன் மது பிரியர்கள் திரும்ப ஒப்படைத்து பத்து ரூபாய் பெற்று வருகிறார்கள். அதே நேரம் ஏற்கனவே பாட்டில் விலையை, மதுவின் அதிகபட்ச விற்பனை விலையுடன் வசூலிக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது குடிமகன்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாட்டிலை திருப்பிக் கொடுப்பவர்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறாமல் அதிகபட்ச விலையில் பாட்டிலுக்கென வசூலிக்கப்படும் கட்டணத்தை திரும்பி வழங்க வேண்டும் என்று மது குடிப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications