கேரளா டூ திருப்பூர்.. காதல் ஜோடி.. 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கதை
திருப்பூர்: 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கதை இது.. 18 வயது நிறைவு பெறும் முன்பே, பருவ வயதில் காதல் என்ற பெயரில் இளைஞர்களால் ஈர்க்கப்படும் சிறுமிகள், அதில் மனரீதியாக பித்துபிடித்தது போல் மாறுகிறார்கள். கடைசியில் வீட்டை விட்டு ஓடிப்போய் வாழ்க்கையை பற்றி புரிதல் இல்லாமல் எதிர்காலத்தை துளைத்து விடுகிறார்கள். இடுக்கியில் இருந்து திருப்பூருக்கு ஓடி வந்த இந்த காதல் ஜோடிகள் பற்றி பார்ப்போம்.
15 அல்லது 16 வயதை அடையும் பெண் குழந்தைகள், அந்த நேரத்தில் இன கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். அப்படி ஈர்க்கப்படும் அவர்கள், தங்களுக்கு பார்த்த உடன் பிடிக்கும் இளைஞர்களை காதலர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அழகு அல்லது காமெடியான பேச்சு அல்லது நேர்த்தியான உடை அல்லது பைக் ரேஸ் அல்லது ரவுடிசம் (சினிமா மோகத்தால்) என ஏதாவது ஒரு காரணத்தால் ஈர்க்கப்படுகிறார்கள்.

அதேநேரம் சில இளைஞர்கள் காதல் வலை வீசுகிறார்கள். அப்படி வீசப்படும் வலையில் விழும் சிறுமிகள், காதல் என்ற மோகத்தில் காதலனுடன் சுற்றுகிறார்கள். காதலன் கூப்பிடும் இடங்களுக்கு எல்லாம் செல்லும் சிறுமிகள், காதலன் தானே என்று எல்லை மீறுகிறார்கள். அப்படி எல்லை மீறிய பின்னர், காதலன் எப்படிப்பட்டவன் என்றாலும் சரி என்று திருமணமும் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக பெற்றோர், சட்டம், போலீஸ் என எதை பற்றியும் கவலைப்படுவது இல்லை.. இதேபோல் 18 முதல் 22 வயதுடைய சில இளைஞர்கள் எந்த எதிர்காலத்தை பற்றியும் யோசிக்காமல், பெண்ணை காதலிப்பது தான் சிறந்த வேலை என்று நினைத்து சுற்றுகிறார்கள்.
இறுதியாக அந்த பெண்ணை திருமணம் செய்வது தான், தனது ஒரே லட்சியம் என்று நினைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். அப்படி வீட்டை விட்டு ஓடும் அவர்கள், கையில் பணம் இருக்கும் வரை அறை எடுத்து தங்கி சுற்றுகிறார்கள். திருமணம் செய்கிறார்கள். நண்பர்களின் அறைகள், வீடு என எங்காவது தங்கி இருக்கிறார்கள். சில நாட்களில் திருமண வாழ்க்கையின் உண்மை தெரியவரும் போதும், காதலனின் சுயரூபம் தெரியவரும் போதும் கலங்கி போகிறார்கள்.
படிக்கும் வயதில் படிக்காமல் காதல் வலையில் விழுந்து, 18 வயதிற்கு முன்பே திருமணமும் முடித்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். காதலனும் வாழ்க்கையை பற்றி புரிதல் இல்லாமல் சிறுமியுடன் அத்துமீறிய குற்றத்திற்காக வாழ்க்கையை தொலைக்கிறார். கடைசியில் போலீசில் பெற்றோர் புகார்அளித்த பின்னர், அழைத்து சென்ற இளைஞன் வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பே போக்சோவில் சிறையில் அடைக்கப்படுகிறான். அந்த பெண் எதிர்காலத்தை பற்றி புரிதல் இல்லாமல் கடைசியில் அவதிப்படுகிறார். இப்படித்தான் பலரது வாழ்க்கை இன்று நடக்கிறது. அப்படித்தான் திருப்பூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் 2 பேர் கடந்த வாரம் திடீரென காணாமல் போனார்கள். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இதன் பேரில் இடுக்கி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை தேடி வந்தார்கள். இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் இருப்பது கேரள போலீசாருக்கு விசாரணையில் தெரிய வந்தது. மேலும் சிறுமிகளுடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் என்ற 2 வாலிபர்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து திருமுருகன்பூண்டிக்கு விரைந்து வந்த கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட போலீசார், அங்கிருந்த 2 சிறுமிகளை மீட்டதுடன், சிறுமிகளை திருப்பூருக்கு அழைத்து வந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அழைத்து சென்றனர். இடுக்கி போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர்கள் இருவரும் ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை காதல் என்ற பெயரில் அழைத்து வந்ததும் தெரிவந்துள்ளது.
பின்னர் சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்ததும், செலவுக்கு பணம் இல்லாததால் திருப்பூருக்கு சிறுமிகளுடன் வேலை தேடி வந்தததும் போலீசுக்கு விசாரணையில் தெரியவந்தது. திருப்பூரில் அவர்கள் நண்பர்கள் உதவியுடன், திருமுருகன்பூண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். பின்னர் அங்குள்ள குடிநீர் பாட்டில் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான இளைஞர்கள் இரண்டு பேர் மற்றும் சிறுமிகள் இரண்டு பேரையும் போலீசார் இடுக்கிக்கு அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications