சென்னிமலையில் தரிசனம்.. மோடி பெயரில் அர்ச்சனை.. 400 தொகுதிகளில் பாஜக வெல்லும் என முருகன் நம்பிக்கை
திருப்பூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுக்க 400 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தொடர்வார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னிமலையில் சாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில் தான் சென்னிமலை முருகன் கோயில். அருணகிரிநாதரால் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்டது இந்த சென்னிமலை கோயிலில் தான். இங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், தயிர் ஆகியவை எவ்வளவு நேரமானாலும் புளிக்காது, இந்த கோயில் அமைந்துள்ள மலை மீது காகங்கள் பறப்பதில்லை என பல்வேறு சிறப்புகளை கொண்டது சென்னிமலை கோயில்.

இந்த கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. முருக பக்தர்களால் பெரிதும் போற்றப்படும் இந்த சென்னிமலை கோயிலை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று கிறிஸ்தவ முன்னணி அமைப்பை சேர்ந்த ஒருவர் பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய இணையமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான எல்.முருகன் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். கையில் வேலுடன் அவரது புகைப்படத்தையும், முருகப்பெருமானின் புகைப்படத்தையும் இணைத்து சென்னிமலை நோக்கி என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சாமி தரிசனம் முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார் எல்.முருகன், அப்போது அவரிடம் , கடந்த சனிக்கிழமை அன்று குஜராத் , அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் வீரர்களை பார்த்து சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் கூறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இதற்கு நான் பதில் ஒரே வரியில் தான் கூற முடியும் என கூறிவிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஸ்ரீ ராம் என தொடர்சியாக முழக்கமிட்டு கொண்டே இருந்தார்.

அதன் பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த எல்.முருகன், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுக்க 400 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தொடர்வார் என கூறினார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முருகன், மீனவர்கள் போராட்டம் தற்போது தேவையற்றது என கூறினார்
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கம் எழுப்பப்பட்டது குறித்து, தமிழக விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த கோஷத்தால் பாகிஸ்தான் வீரர்களை யாரும் அவமானப்படுத்தவில்லை. அது சாதாரண விஷயம் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications