3 ஹெலிபேட்கள்.. பல நூறு பேனர்கள்.. பிரம்மாண்ட மேடை.. மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு பாஜக தயார்!
பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையை அடுத்து, பாஜக மிகப்பெரிய ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்டம் முழுக்க செய்து இருக்கிறது.
Recommended Video

திருப்பூர்: பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையையொட்டி , பாஜக மிகப்பெரிய ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்டம் முழுக்க செய்து இருக்கிறது.
பிரதமர் மோடி, இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் புதிய மெட்ரோ சேவை, விமான நிலைய புனரமைப்பு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
இதன்பின் அவர் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். திருப்பூர் பெருமாநல்லூரில் பெரிய பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி லோக்சபா தேர்தல் குறித்து பேச உள்ளார்.

மொத்த திருப்பூர்
மோடியின் வருகை காரணமாக தற்போது மொத்த திருப்பூர் மாவட்டமும் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. சாலை முழுக்க இதுவரை காணாத அளவிற்கு பாஜக கொடிகள் பறக்கவிடப்பட்டு உள்ளது. அதேபோல் மிகப்பெரிய அளவில் மோடிக்கு பல இடங்களில் கட் வுட்கள் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று ஹெலிபேட்கள்
முக்கியமாக விழா அரங்கிற்கு அருகே மூன்று ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அருகிலேயே தற்காலிக கண்காணிப்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அவசர காலத்தில் வேகமாக செல்லவும், பாதுகாப்பு கருதியும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

மிகப்பெரிய மேடை
அதேபோல் தமிழகத்தில் பாஜக கூட்டம் ஒன்றுக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய மேடை இதுதான் என்றும் கூறுகிறார்கள். 40 அடி நீளமும், 60 அடி சுற்றளவும் கொண்ட மிகப்பெரிய மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய தனி இருக்கை அமைத்துள்ளனர்.

முக்கிய நபர்கள்
அதேபோல் இந்த மேடையில் மிக மிக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே இடமும் அளிக்கப்பட உள்ளது. மேடைக்கு கீழ் முதல் வரிசையில் பெண்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைத்து இருக்கிறார்கள். திமுக, அதிமுக பாணியில் இந்த பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை இருக்கைகள்
இந்த நிகழ்விற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் வருவார்கள் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இதனால் தற்போது 1 லட்சம் பேர் அமரும் வகையில் விழா அரங்கில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இன்று காலை
இந்த கூட்டத்திற்காக இன்று காலையே பாஜக தொண்டர்கள் பலர் வருகை புரிந்துள்ளனர். பாஜக ஏற்பாடு செய்திருந்த பஸ்களில் அருகாமை பகுதிகளை சேர்ந்த பலர் வந்திருக்கிறார்கள். பாஜக, தமிழக அரசியலில் இதை மிக முக்கியமான கூட்டமாக பார்க்கிறது. தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த கூட்டத்தை பாஜக அணுகுகிறது.












Click it and Unblock the Notifications