மாமா, தனியாக செல்ல மனமில்லை.. என்னுடன் வந்துடு.. தற்கொலை செய்த புதுப்பெண்!
திருப்பூர்: திருப்பூர் அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரையும் என்னுடன் வந்து விடு என கையில் எழுதி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா (19). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பழனிச்சாமியின் மகன் நவீன்குமாரை காதலித்து வந்தார்.
கடந்த 4 மாதங்களாக காதலித்து வரும் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் 5-ஆம் தேதி செங்கப்பள்ளி அருகே கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

மாமியார் வீட்டில் தங்கிய சூர்யா
பின்னர் பெற்றோர் மிரட்டியதால் பாதுகாப்பு கேட்டு இருவரும் நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இவர்களது பெற்றோரை அழைத்து போலீஸார் சமாதானம் செய்து வைத்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் நவீன்குமாரின் தாய் காளீஸ்வரி தங்கியிருக்கும் வீட்டில் வசித்து வந்தனர்.

திட்டிய நவீன்
இந்த நிலையில் சூர்யாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று நவீன்குமார் சிகிச்சை அளித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் 3 முறை மருத்துவமனைக்கு சென்று வந்ததால் நவீன்குமார், சூர்யாவை ஏதோ திட்டிவிட்டார்.

வெளியே சென்ற கணவன்
இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர் நேற்று முன் தினம் நவீன்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாய் காளீஸ்வரியும் இளநீர் வியாபாரத்துக்கு சென்றுவிட்டார். இதையடுத்து இரவு வேலை முடிந்து நவீன்குமார் வீடு திரும்பினார்.

சூர்யா தற்கொலை
அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டியும் சூர்யா திறக்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த நவீன்குமார் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்துள்ளார். அப்போது வீட்டில் சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததை கண்டு நவீன் அலறினார்.

நீயும் வந்துவிடு
சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர். தகவலறிந்த போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்நிலையில் சூர்யா தனது இடது கையில் " நான் உன்னை விட்டு தனிமையில் பிரிந்து செல்ல மனம் வரவில்லை. என்னுடன் நீயும் வந்துவிடு" என எழுதி வைத்துள்ளார்.

எழுதி வைத்த சூர்யா
மேலும் வங்கி பாஸ் புத்தகத்தில் " நவி மாமா நீ பேசிய ஒரு வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் செல்கிறேன். என்னுடன் நீயும் வந்துவிடு" என எழுதி வைத்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட சூர்யா, கணவரையும் தன்னுடன் வந்து விடு என எழுதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications