திருப்பூரில் தமிழர்களை தாக்கிய வடமாநிலத்தினர்? தீயாய் பரவும் வீடியா! உண்மை இதுதான்! போலீஸ் விளக்கம்
திருப்பூரில் தமிழர்களை விரட்டி வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக இணையதளங்களில் வீடியோ வெளியாகி வருகிறது.
திருப்பூர்: திருப்பூரில் தமிழ் தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டி தாக்குவதாக இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்சி தலைவர்கள், சமூக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தான் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளதோடு, வதந்திகளை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கட்டட பணி, கோழிப்பண்ணை, ஆயத்த ஆடை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வடமாநிலத்தினர் உள்ளனர். பின்னலாடை தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் அங்கு பணியாற்றும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை என்பது பிற மாவட்டங்களை விட சற்று அதிகமாக உள்ளது.
தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் விரட்டியதாக பரவும் வீடியோ! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
தமிழக தொழிலாளர்களை தாக்கியதாக..
இந்நிலையில் தான் திருப்பூரில் தமிழக தொழிலாளரை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக நேற்று முன்தினம் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியைத் தாக்குவதாக வீடியோ பரவியது. இதையடுத்து தமிழக தொழிலாளர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், கட்டிங் தொழிலாளர் சங்கத்தினர் வடமாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்து கோஷமெழுப்பினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.
போராட்டம் பதற்றம்
மேலும் திருப்பூர் மேயர் தினேஷ் குமார் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஆய்வு செய்தார். மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை தமிழகத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கோபத்தை கொப்பளித்தனர்.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம்..
இந்நிலையில் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றியும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சிகரெட் புகை தொடர்பாக
திருப்பூர் மாநகரம் வடக்கு மாவட்டம் வேலம்பாளையம் காவல் நிலைய சகர எல்லைக்கட்பட்ட திலகர் நகரில் ரியோ பேஷன்ஸ் என்ற கம்பெனி உள்ளது. இங்கு வேலை செய்யும் நபர் கடந்த 14ம் தேதி மாலை தேநீர் இடைவேளையின்போது அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அவருக்கும் அங்கு அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் சிகரெட் பிடிக்கும் போது புகைபட்டது தொடர்பாக சிறிய பிரச்சனை ஏற்பட்டது.
வாக்குவாதத்துக்கு பின் கலைந்தனர்
இதையடுத்து அங்கு இருந்த நபர் ரியா பேஷனில் வேலை செய்யும் நபரை தாக்க முற்பட்டுள்ளார். அதன் காரணமாக அந்த நபர் ரியா பேஷன் கம்பெனியில் வேலை செய்யும் தனது நண்பர்களை அழைத்து வந்தார். இருதரப்பினர்களுக்கம் இடையே வாக்கும் ஏற்பட்டது. இதையடுத்து கலைந்து சென்றுவிட்டனர். எந்த தரப்பிற்கும் காயம் ஏதுவும் ஏற்படவில்லை. இது முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவருகிறது.
வேலைவாய்ப்பு சம்பந்தமாக இல்லை
இது சம்பந்தமாக யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இது தொழில் போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவே அல்லது முன்விரோதம் காரணமாகவே ஏற்பட்ட பிரச்சனை இல்லை. தற்செயலாக இரண்டு நபர் மற்றும் அவர்களின் நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையே. இருப்பினும் இது சம்பந்தமாக முழுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனவரி 26ல் நடக்கவில்லை
ஜனவரி 14ம் தேதி நடந்து முடிந்த இந்த பிரச்சனையை ஜனவரி 26ம் தேதி நடைபெற்றதாகவும், பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தமிழர்களை வடஇந்தியர்கள் விரட்டுவதாக சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மைக்கு புறம்பானது. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.