பல்லடம் அருகே 4 பேர் படுகொலை வழக்கு.. முக்கிய குற்றவாளியை நெருங்கிய போலீஸார்.. மேலும் ஒருவர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சோனை முத்தையா என்பவரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). இவர் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இவரது வீட்டின் அருக 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொன்றது. இதை தடுக்க சென்ற அவருடைய தம்பி மோகன்ராஜையும் அவருடைய தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளனர்.
இதில் அவர்களது கை,கால்கள் தனித்தனியே வெட்டி வீசப்பட்டன. 4 பேரையும் வெட்டிச் சாய்த்த அந்த கும்பல் அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றது. இதனிடையே அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் குவிந்தனர். தகவலறிந்த பல்லடம் போலீஸார் சமபவ இடத்திற்கு வருகை தந்தனர். இந்த நிலையில் உடலை கைப்பற்றி அவற்றை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு டாஸ்மாக்தான் காரணம் என்பதால் அக்கடைகளை மூடுமாறு சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் விசாரணையில் இது முன்விரோதத்தால் நடந்த கொலை என சொல்லப்படுகிறது.
விசாரணையில் செந்தில்குமாரிடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (34) என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமார், வெங்கடேஷை வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெங்கடேஷ் மற்றும் சிலர் செந்தில்குமார் இடத்தில் மது அருந்தி பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது போல் ஏற்கெனவே ஒருவர் கைதான நிலையில் தற்போது மற்றவர்களையும் விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை போலீஸார் நெல்லை சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தொடர்பான இடங்கள், உறவினர்கள், நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெங்கடேசனின் செல்போன் கடைசியாக நெல்லையில் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் அவர் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை அடையாளம் காண அழைத்துச் சென்றபோது தப்பியோட முயற்சித்தார். அப்போது தவறி விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்லடம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சோனை முத்தையா என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications