திமுகவின் கொ.ப.செ. நயன்தாராவை பற்றி பேசிவிட்டேனாம்.. என்னை நீக்கிட்டாங்க.. வம்பிழுக்கும் ராதாரவி
திருப்பூர்: திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாராவை பற்றி பேசிவிட்டேனாம். என்னை நீக்கிவிட்டார்கள் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் 370 சட்டத்திற்கு பிறகே இந்தியாவின் முழுமையான வரைபடம் வெளியாகி உள்ளது. இதுநாள் வரை திராவிடத்தை சுவாசித்த நான் பாஜக மூலமாக தேசியத்தை சுவாசிக்க வந்திருக்கிறேன்.
பாஜக தோற்கிறது என்கிறார்கள். பாஜக தோற்றால் என்ன ஜெயித்தால் என்ன பாஜக இருக்கிறது. எங்கிருந்தாலும் இந்துக்கள் என்ற எண்ணத்துடன் வாக்களியுங்கள். இந்த நாடு இந்து நாடாக வாக்களியுங்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை தமிழகத்தில் யாருக்கு பாதிப்பு என கேட்கிறார் ஆனால் அதற்கு பதில் சொல்லாமலே கடந்து செல்கிறார் ஸ்டாலின்.
நடிகர்
படித்து பார்த்திருந்தால் தெரியும். அவர் புரட்டி பார்த்தவர்தானே எப்படி தெரியும். பட்ஜெட் குறித்து கேட்டால் உப்புச் சப்பில்லாத பட்ஜெட் என்கிறார். கருணாநிதி புத்திசாதூர்யம் உள்ளவர். அவர் இருந்திருந்தால் சிஏஏவை ஆதரித்திருப்பார். திமுகவில் தலைமை சரியில்லை, இதனால் பல நல்லவர்கள் என்ன செய்வது என தெரியாமல் விழிக்கின்றனர். ஸ்டாலினுக்கு தமிழகத்தில் கிழக்கு மேற்கு தெரியவில்லை. அவர் நடிகரும் இல்லை அரசியல்வாதியும் இல்லை.
போராட்டம்
போருக்கு தயாராகி விடும் என்கிறார்கள். அந்த அளவிற்கு எல்லாம் செல்லாது. எங்களுக்கும் எல்லாம் தெரியும். சந்தனப்பொட்டு வைத்திருப்பதால் இளிச்சவாயன் என நினைக்க வேண்டாம். தந்தை பெரியார் சிலை உடைப்புக்கு காரணம் வீரமணிதான். தாலி அறுக்கும் போராட்டம் நடத்துகிறார். தினமும் சாலைகளில் தாலி அறுக்கிறார்கள் அவர்களை சேர்த்துக் கொள்வாரா? பூணூல் அறுக்கும் போராட்டம் என முன்பு நடத்தி விட்டார்கள்.
திமுக உருப்படாது
வீரமணி உள்ளவரை திமுக உருப்படாது. தமிழகம் முழுவதும் 1500 பேரை வைத்துக் கொண்டு தொல்லை பண்றாங்க. திமுகவினர் தங்கள் பள்ளியில் இந்திதான் கற்று தருகின்றனர். அங்கு தமிழ் பேசினால் குற்றம். ஏமாளியாக இருந்து விடாதீர்கள். அனைவரும் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். திமுக கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாரா பற்றி பேசி விட்டேனாம் , என்னை கட்சியில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
வெளிச்சம்
இருட்டில் இருந்தேன் ஒரு வெளிச்சம் வந்தது அதன் மூலமாக தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன். இதன் நன்மைகளை கண்டபின் அனைவரையும் பாஜகவில் சேர வலியுறுத்துகிறேன். பல நடிகர்கள் பாஜகவில் சேர உள்ளனர். நடிகர் கார்த்திக்கிடம் பாஜகவில் சேருமாறு பேசியுள்ளேன். திமுகவில் கூட்டம் வரும் ஆனால் 2000 கொடுத்தால் மாறி விடுவார்கள். வரும் சட்டசபையில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் பாஜக துணையுடன்தான் முதல்வராக முடியும்.
தாழ்த்தப்பட்டவர்கள்
சகோதரர் திருமாவளவனை எனக்கு மிகவும் பிடிக்கும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு நாங்கள் போட்ட பிச்சை என திமுகவினர் சொல்லும்பொழுது கொஞ்சமாவது கோபம் வர வேண்டாமா. நான் அவரைப் பற்றி பேச மாட்டேன். ஆனால் இங்கு இருப்பவர்கள் அவரைப் பற்றி பேசுவார்கள். இது ஆபத்தான கூட்டம். அவர்கள் பேசுவதை என்னால் தடுக்க முடியாது ஏன் என்றால் அத்தனையும் உண்மை. எதிர்கட்சியினர் தான் இந்தியாவின் கொரோனா அவர்களுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால் தேர்தலில் சரியாக ஓட்டு போடுங்கள்.