திருப்பூரில் ரைஸ்மில் ஓனர் மகன் கடத்தல்.. ரூ.3 கோடி பேரம்.. 6 மணி நேரத்தில் கும்பலை பிடித்த போலீஸ்
திருப்பூர்: திருப்பூரில் ரைஸ் மில் ஓனர் ஒருவரின் மகன் கடத்தப்பட்ட புகாரில் போலீசார் வெறும் 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து உள்ளனர். புகார் தரப்பட்ட 6 மணி நேரத்தில் சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் கடத்தல் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள்.
திருப்பூரில் உள்ள காடையூர் பகுதியில் மிகப்பெரிய அரிசி ஆலை வைத்து நடத்தி வருபவர் ஈஸ்வர மூர்த்தி. இவரின் மகன் சிவபிரதீப்தான் தற்போது அரிசி ஆலை பணிகளை கவனித்து வருகிறார். அரிசி ஆலையை மூடி விட்டு இரவு நேரத்தில் இவர் டிரைவருடன் காரில் வருவது வழக்கம்.
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் இவர் மில்லுக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பும் போது மர்ம கும்பல் இவரை சுற்றி வளைத்தது. இவரின் காரில் டிரைவரும் இருந்திருக்கிறார்.

கார் மறியல்
நடு ரோட்டில் காரை மறித்த கும்பல் என்று கத்தி, கம்புகளை காட்டி காருக்குள் சென்று இருக்கிறார்கள். காரில் இரண்டு பேரையும் கட்டிபோட்டுவிட்டு, காரோடு இரண்டு பேரையும் அந்த மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து சிவபிரதீப் தந்தை ஈஸ்வர மூர்த்திக்கு போன் செய்த கடத்தல் கும்பல் அவரிடம் 3 கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளனர். 3 கோடி ரூபாய் கொடுத்தால் மகனின் உயிரோடு விடுவோம், இல்லையென்றால் கதை அவ்வளவுதான் என்று மிரட்டி உள்ளனர்.

போலீஸ்
அதோடு உங்களை கண்காணித்து வருகிறோம். போலீசிடம் சென்றால் உங்கள் மகன் உயிருக்கு நாங்கள் உத்திரவாதம் கொடுக்க முடியாது என்றும் மிரட்டி உள்ளனர். மகனை உயிரோடு மீட்க வேண்டும் என்று பயந்து போன ஈஸ்வர மூர்த்தி, உடனே தனது சேமிப்பு பணம், நகை, உறவினர்களிடம் இருந்த பணம் அனைத்தையும் திரட்டி 3 கோடி ரூபாயை ஏற்பாடு செய்து இருக்கிறார். இதையடுத்து பணத்தை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் பைபாஸ் சாலைக்கு வரும்படி ஈஸ்வர மூர்த்தியிடம் கடத்தல் கும்பல் தெரிவித்துள்ளது.

கடத்தல் கும்பல்
திண்டுக்கல் சாலையில் நின்று கொண்டு இருந்த கடத்தல் கும்பலிடம் 3 கோடி ரூபாயை ஈஸ்வர மூர்த்தி கொடுத்துவிட்டு, தனது மகனையும், டிரைவரையும் மீட்டுவிட்டு பாதுகாப்பாக திரும்பி வந்து இருக்கிறார். கடத்தல் கும்பல் இவர்களின் காரை திரும்பி கொடுக்கவில்லை. மகன் திரும்பி கிடைத்த பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட ஈஸ்வர மூர்த்தி உடனடியாக போலீசிடம் புகார் அளித்தார்.

புகார்
காங்கேயம் காவல் நிலையத்தில் ஈஸ்வர மூர்த்தி புகார் அளித்துள்ளார். இதையடுத்து உடனே தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தல் கும்பலை தேடும் பணி நடைபெற்றது. இதையடுத்து ஆள் கடத்தல் கும்பலின் அடையாளம் குறித்து கடத்தப்பட்ட சிவபிரதீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், ஆலையில் வேலை பார்த்து வந்த பாலாஜி, சக்திவேல் ஆகிய இரண்டு பேரும் இந்த கடத்தலுக்கு உடந்தை, அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே கடத்தல் நடந்ததும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மதுரை
இன்னொரு பக்கம் ஈஸ்வர மூர்த்தி பணம் கொடுத்த திண்டுக்கல் சாலைக்கு சென்ற போலீஸ் அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தது. இதன் மூலம்கடத்தல் காரர்கள் பயன்படுத்திய கார் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கார் சென்ற பாதை மொத்தமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. அந்த கும்பல் காரை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக மதுரைக்கு சென்றது சிசிடிவி ஆதாரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தல்
சிசிடிவி ஆதாரங்களை வைத்து அந்த கடத்தல் கும்பல் மதுரையில் கடைசியாக சென்ற வீட்டை கண்டுபிடித்த போலீஸ் 6 மணி நேரத்தில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்தனர். மொத்தம் 7 பேர் இந்த கடத்தலில் ஈடுபட்ட நிலையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 1.80 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு பேரை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications