திருப்பூரில் மூதாட்டிகள் என்று கூட பார்க்காத சிவச்சந்திரன்.. நிறைய தங்க நகைகள்.. சிக்கியது எப்படி?
திருப்பூர்: சேவூர் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்த மூதாட்டி வள்ளியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவசந்திரன் வசித்து வந்தார். இவர் வள்ளியம்மாள் மற்றும் அவரது தங்கை பூவாத்தாள் ஆகியோரிடம் குடும்ப நலனுக்காக கலச பூஜை செய்வதாக கூறி மூதாட்டிகளிடம் 12 பவுன் நகைகளை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவரை எப்படி போலீசார் கைது செய்தார்கள் என்பது பற்றி பார்ப்போம்.
தங்க நகைகளின் விலை தற்போது தாறுமாறாக விற்கிறது. ஒரு பவுன் தங்கம் 66 ஆயிரத்தை தொட்டுவிட்டது. ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரத்தை எல்லாம் சேர்த்தால் ஒரு பவுன் 70 ஆயிரம் முதல் 72 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இவ்வளவு பணம் கொடுத்து தங்கத்தை வாங்குவது என்பது சாமானிய மக்களுக்கு சவாலானது ஆகும். தங்கத்தின் விலை உயர்வு காரணமாக, அதை திருடுவது, வழிப்பறி செய்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வீடுகளில் தோஷம் கழிப்பதாக கூறி தங்க நகைகளை பறிக்கும் கூட்டமும் வலம் வருகிறது. தங்க நகைகளை வைத்து பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறி சில கோஷ்டிகள் வலம் வருகின்றன. அந்த வகையில் குடியிருந்த வீட்டிலேயே தங்க நகைகளை மோசடி செய்துள்ளார் ஒருவர். திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 70). இவருடன் இவரது தங்கை பூவாத்தாளும் குடியிருந்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் சிவசந்திரன் என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். அப்போது சிவசந்திரன், வள்ளியம்மாளிடம் கலச பூஜை செய்தால் குடும்ப நலன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினாராம்.
இதை நம்பி கலச பூஜையில் கலந்து கொண்ட வள்ளியம்மாள் மற்றும் அவரது சகோதரி பூவாத்தாள் ஆகியோர் சிவசந்திரன் கூறியபடி தங்களது கழுத்தில் அணிந்திருந்த மொத்தம் 12 பவுன் நகைகளை கலசத்திற்குள் போட்டிருக்கிறார்களாம். அதற்கு மாற்றாக இரு சங்கிலிகளை சிவசந்திரன் அவர்களுக்கு கொடுத்துள்ளார். பிறகு சிவசந்திரன் வீட்டை காலி செய்து சென்று விட்டாராம்.
2 மாதங்களுக்கு பிறகு வள்ளியம்மாளும், அவரது தங்கையும் ஏற்கனவே சிவசந்திரன் கொடுத்த சங்கிலியை அணிந்து கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அணிந்து இருந்த சங்கிலி நிறம் மாறி காணப்பட்டது. அதன்பின்னர் அந்த சங்கிலியை பரிசோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்று தெரியவந்தது. அப்போதுதான் சிவசந்திரன் அவர்களை ஏமாற்றியது தெரியவந்தது. இது குறித்து சேவூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசந்திரனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சேவூர் போலீசார் அவினாசி - கருமாபாளையம் அருகே நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவசந்திரன் என்பதும், வள்ளியம்மாளிடம் பூஜை செய்வதாக 12 பவுன் தங்க நகை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவசந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.












Click it and Unblock the Notifications