பட்டியலின பெண் பள்ளியில் சமைப்பதை தடுத்து சாதி தீண்டாமை.. 6 பேர் குற்றவாளிகள்.. 2 ஆண்டு சிறை தண்டனை!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு பள்ளி சமையலர் பாப்பாள் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை வன்கொடுமை தொடர்பான வழக்கில் பெண் உள்பட ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் 6 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த திருமலைகவுண்டன்பாளையம் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சமையலராக பாப்பாள் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இந்தக் காரணத்திற்காக அந்த பள்ளியில் சமைத்த உணவை குழந்தைகள் உட்கொள்ள மாட்டார்கள் என அப்பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியினர் அவரை சமையல் செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

மேலும், அவர் சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பள்ளிக்கூடத்தைப் பூட்டினர். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்து, இந்த சாதிய கொடுமை சம்பவத்துக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்தன. இது தொடர்பாக வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டதையடுத்து வழக்கு அந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில் சுமார் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் நடைபெற்ற போது வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த மீனாட்சி மேல்முறையீடு காரணமாக வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த 35 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். மீமுள்ள 31 பேர் மீதான வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் இன்று தீர்ப்பு அளிக்கையில், இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள 31 பேரில் 25 பேரை விடுவித்தும். பெண் உட்பட 6 பேரை குற்றவாளி எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பழனிச்சாமி கவுண்டர், சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகிய 6 போரையும் தண்டனை விவரங்களை இன்று மதியம் இரண்டு மணிக்கு மேல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அரசு பள்ளி சமையலர் பாப்பாள் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை வன்கொடுமை தொடர்பான வழக்கில் பெண் உள்பட ஆறு பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்து இன்று பிற்பகலில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications