திருச்செந்தூர் திருப்பம்.. திருப்பரங்குன்றம் பரபரப்பு.. நேராக மதுரைக்கு வரும் இந்து முன்னணி.. அதிரடி
திருப்பூர்: இந்து தர்மத்தை காக்க, கோவில்களை காக்க, பண்பாட்டை காக்க, உலகெங்கிலும் உள்ள, குறிப்பாக தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் ஒருங்கிணைந்திட வேண்டிய காலகட்டத்தில் இருந்து வருவதாகவும், இதற்காக ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்திடவும் இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. மேலும், மாநாட்டில் பங்கேற்பதற்காக, வீடு வீடாக சென்று முருகபக்தர்களை அழைக்க போவதாகவும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இந்துக்களுக்கு விரோதமாக திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, இந்து முன்னணி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.... இந்துக்கள் மனதை திமுக அரசு புண்படுத்தும் விதங்களை, தன்னுடைய ஒவ்வொரு கண்டன அறிக்கையின் மூலமும் வெளிப்படுத்தி வருகிறார் இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்.

குறிப்பாக, பின்தங்கியவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், பட்டியல் சமூகத்தினர் என்று ஜாதி அடிப்படையிலேயே தனித்தனியாக நடத்தி சாதி அடையாளத்தை திணிப்பதே இந்த அரசுதான் என்றும் சாடி வருகிறார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்
அதேபோல, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று கூறி, முருகன் மலையை காப்பாற்றும் போராட்டத்தையும் இந்து முன்னணி கையில் எடுத்தது.
"வரும் காலங்களில் இந்த அரசு திருந்த வேண்டும். இல்லையென்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் முருகப்பெருமான் பாதிப்பை ஏற்படுத்துவார். இந்துக்களுக்கு எதிராக உள்ள திமுக அரசு, நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். சிக்கந்தருக்கு திருப்பரங்குன்றம் மலை மீது எந்த உரிமையும் இல்லை, புனிதமான மலையில் ஆடு, கோழி வெட்டுவது ஏற்புடையதல்ல. எனவே, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அழுத்தம் தருவோம், திமுக அரசை வெளியேற்ற அறப்போராட்டத்தை நடத்துவோம்" என்றெல்லாம் தெரிவித்தார்.
முருகனின் அற்புத தலங்கள்
அதுமட்டுமல்ல, முருகனின் அற்புத தலங்கள் பலவும் சீரழிந்து வருவதால், இதுகுறித்த கவலையும் இந்து முன்னணிக்கு தற்போது எழுந்துள்ளது.. இதையடுத்து, வரும் ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்திட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அதில், "வரும் ஜூன் 22ல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஐந்து லட்சம் பக்தர்களை பங்கேற்க வைக்க முயற்சி நடக்கிறது. தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதற்கு ஒரு கும்பல் சதி செய்ததை நாம் அறிவோம்.
பழனி பாதயாத்திரை
இரண்டாவது படைவீடான திருச்செந்துார் கடல் அரிப்பால் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயத்தை தடுக்க தமிழக அரசு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மூன்றாம் படை வீடான பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு கூட தமிழக அரசு தடை விதித்து வருகிறது.
இதுபோல், முருகனின் அற்புத தலங்கள் பலவும் சீரழிந்து வருவது பற்றிய கவலை பக்தர்களிடம் எழுந்துள்ளது. வேற்று மத பண்டிகைகளுக்கு தமிழக அரசு வாழ்த்து சொல்லும் நிலையில் தமிழ் தெய்வம் முருகப் பெருமானின் தைப்பூசத் திருவிழாவுக்கு வாழ்த்து சொல்வதற்கு கூட, தற்போதைய தமிழக அரசுக்கும் மனமில்லை.
22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு
இத்தகைய சூழலில், நமது இந்து தர்மத்தை காக்க, கோவில்களை காக்க, பண்பாட்டை காக்க, உலகெங்கிலும் உள்ள, குறிப்பாக தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் ஒருங்கிணைந்திட வேண்டிய காலகட்டத்தில் இருந்து வருகிறோம். இதற்காக, ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்திட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாக சென்று முருகபக்தர்களை அழைக்கவும், மாநாட்டின் நோக்கத்தை மக்களுக்கு விளக்கிடவும், பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications