திருப்பூர் மாநகராட்சியுடன் மல்லுக்கட்டும் சின்ன சிறிய கிராமம்.. மாடுகளுடன் மிரள வைத்த மக்கள்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு சரியான இடம் கிடைக்காமல் மாநகராட்சி அல்லாடுகிறது. இந்நிலையில் திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில் உள்ள சின்ன காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் குப்பை கிடங்கு அமைக்கப்பட உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 700க்கும் மேற்பட்டோர் போராடி வருகிறார்கள். இப்போது மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், சேகரிக்கப்படும் குப்பைகளை, மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது இதனிடையே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதனை அடுத்து திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான 7.20 ஏக்கர் இடம் இடுவாய் அருகே சின்ன காளிபாளையம் கிராமத்தில் உள்ளது. அந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இங்கும் குப்பை கொட்டுவதற்கு இடுவாய் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இடுவாய் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகளை கொட்ட ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு இடத்தை சுத்தப்படுத்தும் பணி மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகிடங்கு அமைப்பதை செயல்படுத்தியே ஆக வேண்டும் என தீர்மானம் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி குப்பை கிடங்கு அமைக்கும் பகுதிக்கு எதிர்ப்புறம் இன்று முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி காலை முதலே இடுவாய் ஊராட்சி வேலம்பாளையம் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த, ஆண்கள் பெண்கள் என 700க்கும் மேற்பட்டோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். அது மட்டும் இன்றி தங்களது வீடுகளில் வளர்க்கும் மாடுகளையும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வந்தனர். இந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டினால் இடுவாய் கிராமத்தை சுற்றியுள்ள சின்ன காளிபாளையம் ஆட்டயம்பாளையம் இடுவாய் சீரான பாளையம் கிராம மக்கள் 20,000 மேற்பட்டவர்கள் மற்றும் அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கிய 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கும் நிலை ஏற்படும் என எதிர்க்கிறார்கள்.
மேலும் குப்பை கொட்டும் இடத்திற்கு அருகாமையில் மாணவர்களின் கல்வி பயன்பாட்டுக்காக அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே சுகாதார சீர்கேடு ஏற்படுத்தினால் பூங்காவின் நிலைமை மோசமாகிவிடும், அதுமட்டுமின்றி சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களும் வீணாகிவிடும், எனவே இங்கு குப்பை கிடங்கு அமைக்க கூடாது என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஈடுபட்டதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications