திருப்பூரில் சொந்த வீட்டுக்கு கரண்ட் கேட்ட நபர்! மின்சார வாரியத்தின் அரசு அதிகாரிகளே இப்படி என்றால்?
திருப்பூர்: அரசு அலுவலகங்களில் சில அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்சம் வாங்குவது பெருகி வருகிறது.. தங்களை நாடி வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவோரை காவல்துறையும் அதிரடியாக கைது செய்து வருகிறது. பொறுப்புள்ள சில பெண் அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் லஞ்சம் வாங்கப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இதுதொடர்பான விசாரணயையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த 5 வருடங்களில் லஞ்சம் வாங்கி கைதான பட்டியல் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருந்தது.. அதில் முதலிடத்தில் வருவாய்த்துறை உள்ளது.. இரண்டாவது இடத்தில் மின்சார வாரியம் உள்ளது.. இது தமிழக மக்களை கவலை கொள்ள செய்தது. எனினும், சில அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் லஞ்ச புகார்கள் குறையவில்லை. நேற்றுகூட ஒரே நாளில் 2 பேர் கைதாகி உள்ளனர்.

அரசு அதிகாரிகள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு 36 வயதாகிறது.. இவர் மத்திய அரசு ஊழியர் ஆவார்.. பாலவேடு, ஏ.என்.எஸ்., நகரில் உள்ள தன் நிலத்தில், வீடு கட்டுவதற்காக, தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்காக திருநின்றவூர் துணை மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கான 5,525 ரூபாயையும் கட்டணமாக செலுத்தியிருக்கிறார்.
அதனி செப்டம்பர் 13ம் தேதி நிலத்தை ஆய்வு செய்த மின்வாரிய வணிக ஆய்வாளர் 41 வயது ரஜினி என்பவர், மின் இணைப்பு வழங்க 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்.. இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த 23ம் தேதி சங்கர் புகார் அளித்துவிட்டார்.. பிறகு மறுநாள் வேலை நிமித்தமாக சங்கர் டெல்லிக்கு சென்றுள்ளார்.
தற்காலிக மின்சார இணைப்பு
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 26ம் தேதி, சங்கரின் நிலத்திற்கு, தற்காலிக மின் இணைப்பு வழங்கிய ரஜினி, லஞ்ச தொகை கேட்டு ஓயாமல் தொல்லை தந்துள்ளார்..
இதனால் மேலும் அதிருப்தியடைந்த சங்கர், டெல்லியில் இருந்து திரும்பியதுமே, லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின்படி, கோமதிபுரத்தில் உள்ள திருநின்றவூர் துணை மின் வாரிய அலுவலகத்தில், ரசாயனம் தடவிய 3,000 ரூபாயை, ரஜினியிடம் நேற்று வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரஜினியை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.. அவரிடம் விசாரணை நடக்கிறது.
நிரந்தர மின் இணைப்பு
அதேபோல திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.. இங்கு வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் 56 வயதான ஜெயகுமார்..
இவரிடம் இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர், தன்னுடைய சொந்தமான வீட்டிற்கு நிரந்தர மின் இணைப்பு வழங்ககோரி, விண்ணப்பம் அளித்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்திய தாராபுரம் வடக்கு மின்வாரிய வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், தனக்கு ரூ.3,000 லஞ்சமாக வேண்டும் என்று கேட்டாராம்.
இதைக்கேட்டு அதிர்ந்த சிவசுப்பிரமணியம், உடனே இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
கணக்கில் வராத பணம்
சம்பவ இடத்துக்கு நேரில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சிவசுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினார்கள்.. அந்த பணத்தை சிவசுப்பிரமணியம் ஜெயக்குமாரிடம் நேரில் தந்துள்ளார்.. அப்போது மறைந்திருந்த இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
மேலும் அவரது அலுவலகத்தில் அதிரடியான ஆய்வையும் நடத்தியிருக்கிறார்கள்.. அப்போது கணக்கில் வராத ரூ.13,000 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் போலீஸார் கைப்பற்றினார்கள்.. தற்காலிக மின் இணைப்பு, நிரந்தர மின் இணைப்பு கேட்ட 2 அதிகாரிகளும் நேற்று ஒரே நாளில் கைதானதால், அந்தந்த மின்வாரிய அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications