கத்தியால் தானே கிழிப்பு- மத கலவரத்தை தூண்ட முயற்சி- வசமாக சிக்கிய அர்ஜூன் சம்பத் கட்சி பிரமுகர்!
திருப்பூர்: திருப்பூரில் கட்சியில் செல்வாக்கு பெறுவதற்காக தம்மை தாமே கத்தியால் கிழித்துக் கொண்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் நந்து நாடகமாடியதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நந்து, எஸ்.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது தம்மை பிற மதத்தினர், காவி வேட்டி கட்டியவர்கள் கத்தியால் தாக்கியதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதனால் திருப்பூரில் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிக்கிய நந்துவின் ஓட்டுநர் ராமமூர்த்தி போலீசில் உண்மைகளை கக்கியுள்ளார்.
அதில், கட்சியில் செல்வாக்கு பெறுவதற்காக தம்மை நந்து கத்தியால் கிழிக்க கூறியதாகவும் நந்துவும் தம்மை கத்தியால் கீறிக் கொண்டு போலீசில் புகார் செய்ததாகவும் தெரிவித்தார். இதனை திருப்பூர் போலீசார் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளனர்.

மேலும், சுய விளம்பரத்துக்காக மற்றும் லாபத்துக்காக பொதுமக்கள் மற்றும் மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திருப்பூர் போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications