இ-ஸ்கூட்டர் வாங்க 20 ஆயிரம்.. தங்கம் சொன்னது நடைமுறைக்கு வந்தாச்சு.. திருப்பூர் அதிகாரி விளக்கம்
திருப்பூர்: ஸ்விக்கி, ஜெமாட்டோ, ஜெப்டோ உள்பட பல்வேறு ஆன்லைன் உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி தொழில் செய்வோர், அதற்கு என்று மொத்தமாக உள்ள தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன. அதில் ஒரு திட்டம் தான் இ-ஸ்கூட்டர் வாங்க 20 ஆயிரம் மானியம். இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் அரசு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,000 இணையம் சார்ந்த சேவைப் பணித் தொழிலாளர்களுக்கு புதிதாக இருசக்கர மின் வாகனம் (e-Scooter) வாங்கும் பொருட்டு தலா 20,000 ரூபாய் மானியமாக வழங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 2025-26ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தார்.

தங்கம் தென்னரசு விளக்கம்
இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் உரையில் கூறும் போது, வேகமாக வளர்ந்து வரும் இணையம் சார்ந்த பொருளாதாரச் சூழலில், இணையம் சார்ந்த சேவைப் பணிகளில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துவரும் நிலையில், இத்தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியம் (Gig Workers Welfare Board) உருவாக்கப்பட்டது.
இ ஸ்கூட்டர் வாங்க மானியம்
இந்நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 2,000 இணையம் சார்ந்த சேவைப்பணித் தொழிலாளர்களுக்கு புதிதாக இருசக்கர மின் வாகனம் (e-Scooter) வாங்கும் பொருட்டு தலா 20,000 ரூபாய் மானியமாக வழங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள இணையம் சார்ந்த சேவைப்பணித் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில், சுமார் 15 லட்சம் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணம் மற்றும் இயலாமை இழப்பீட்டுக்கான குழு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஏசி ஓய்வறை திட்டம்
மேலும், இவ்வகை சேவைப்பணித் தொழிலாளர்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக்கூடங்கள், சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 1975 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். இதன்படியே திட்டம் தமிழ்நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. எனவே ஆன்லைன் டெலிவரி தொழில் செய்வோர், அதற்கு என்று உள்ள தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன. அதில் ஒரு திட்டம் தான் இ-ஸ்கூட்டர் வாங்க 20 ஆயிரம் மானியம்.
திருப்பூர் அதிகாரி விளக்கம்
இதுபற்றி திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செந்தில்குமரன் வெளியிட்ட அறிவிப்பில், " தமிழகத்தில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலையை ஒழுங்குபடுத்தவும், சமூக பாதுகாப்பு வழங்கவும் உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டம் இயற்றப்பட்டு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் 18 நலவாரியங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில், ஆன்லைன் இணையம் சார்ந்த பணி செய்யும் தொழிலாளர்கள், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களை பதிவு செய்யும் வகையில் மாவட்டந்தோறும் முகாம்கள் நடந்து வருகிறது.
20 ஆயிரம் மானியம்
மேலும் தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 2 ஆயிரம் உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20 ஆயிரம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் மானியம் பெற tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை 0421 2477276 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்" என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications