கத்தை கத்தையாக கொடுத்த காண்ட்ராக்டர்.. திருப்பூர் மாநகராட்சி ஆபிசுக்குள்ளேயே அக்கப்போரு.. ட்விஸ்ட்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தார் சாலை அமைக்கும் பணியை எடுத்து செய்துள்ள ஒப்பந்ததாரரிடம் சாலைப் பணிக்கான பில் தொகையை அனுமதிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருப்பூர் மாநகராட்சி அதிகாரியான இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு லட்சம் லஞ்சம் கேட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் பொறி வைத்து பிடித்துள்ளனர்.
கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், நகராட்சி அதிகாரி, மாநகராட்சி அதிகாரி என பலர் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கி வருகிறார்கள். பட்டா பெயர் மாற்றம் செய்ய, சொத்து வரி பெயர் மாற்றம் செய்வது, வாரிசு சான்றிதழ் பெற என பல்வேறு விஷயங்களுக்கான லஞ்சம் வாங்கியதாக கைதாகி வருகிறார்கள். அப்படித்தான் திருப்பூரில் மாநகராட்சி அதிகாரி கைதாகி உள்ளார்.

திருப்பூர் சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதாகும் சுரேஷ்குமார் என்பவர் திருப்பூர் மாநகராட்சியில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கந்தசாமி என்பவர் மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஆவார். கந்தசாமி திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1 கோடியே 59 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை எடுத்து செய்திருக்கிறார்.
பின்னர் கந்தசாமி, சாலைப்பணிக்கான பில் தொகையை அனுமதிக்க விண்ணப்பித்துள்ளார். அதற்கு மாநகராட்சி அதிகாரி சுரேஷ்குமார் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று லஞ்சம் கேட்டுள்ளாராம். முதல்கட்டமாக கந்தசாமி ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். அதன்பிறகு மீதம் ரூ.1 லட்சத்தை தர வேண்டும் என்று சுரேஷ்குமார் பேரம் பேசினாராம்.. இதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் கந்தசாமி, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய பணத்தை ஒப்பந்ததாரரிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்கள்.
நேற்று மாலை ஒப்பந்ததாரர் கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த சுரேஷ்குமாரிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை சுரேஷ்குமார் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுரேஷ்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள். அவரை அழைத்த சென்ற போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருப்பூர் மாநகராட்சி அதிகாரி கைதான சம்பவம் திருப்பூர் மாவட்ட அரசு ஊழியர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கடுமையாக எச்சரித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், லஞ்சம் வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம் என்றார், இதபற்றி அவர் இரண்டு நாள் முன்பு வேலூரில் கூறும் போது, "கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரு.3. 1/2 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்குகிறது. இதற்கு சிலர் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் கொடு எனக் கேட்பதாகத் தகவல் வந்துள்ளது.
யாருக்கும் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டாம். எந்த கொம்பன் கேட்டாலும் லஞ்சம் தராதீர்கள். அப்படி யாராவது கேட்டால் புகார் தெரிவியுங்கள். அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கொடுக்கும் திட்டத்தில் இல்லாதவர்களிடம் பேரம் பேசி காசு(லஞ்சம்) வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம். யாருக்கும் நீங்க ஒத்த பைசாவை தரக் கூடாது கூடாது" என்று துரைமுருகன் ஆவேசமாக பேசினார்.












Click it and Unblock the Notifications