மொத்தமாக முடங்கிய திருப்பூர்.. இன்று முதல் ஜவுளி உற்பத்தி 50% ஆக குறைப்பு! தொழிலாளர்கள் பாதிப்பு
திருப்பூர்: இந்தியா-அமெரிக்கா இடையிலான வரி பஞ்சாயத்து காரணமாக ஏற்கெனவே திருப்பூரில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில், இன்று முதல் திருப்பூர் மற்றும் கோயம்பத்தூரில் ஜவுளி உற்பத்தி 50% ஆக குறைக்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மற்றும் கோவையில் 10,000க்கும் அதிகமான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் ஆடர்களை பொறுத்து நூல்களை கொள்முதல் செய்யும். பஞ்சு மூலம்தான் நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11% வரி இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாக இந்த வரிக்கு மத்திய அரசு விலக்கு கொடுத்து வந்தது. இந்த ஓராண்டு காலகட்டம் என்பது கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.
எனவே, மீண்டும் வரி விலக்கு கொடுக்கப்படாததால் நூல் விலை எப்போது வேண்டுமானாலும் உயரும் அபாயம் இருந்தது. அச்சமடைந்தது போலவே நூல் விலை திடீரென அதிகரித்திருக்கிறது.
கடந்த 3 வாரமாக நூல் விலை 20% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. எனவே ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திணறியுள்ளன. பழைய நூல் விலையை கணக்கில் கொண்டு ஏற்கெனவே பெறப்பட்ட ஆடர்களுக்கு, அதிக விலை நூல் கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இன்று முதல் உற்பத்தியை 50% ஆக சுருக்க ஜவுளி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. அதேபோல நூல் விலையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications