திருப்பூரில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் மூச்சு பேச்சு இல்லாமல் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!
திருப்பூர்: திருப்பூரில் மர்மமான முறையில் ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video

திருப்பூர் தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (32). இவரது மனைவி ஆர்த்தி (25). இந்த தம்பதிக்கு பிரையன் (7), பிரியங்கா (4) மற்றும் அனில்(3) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சந்தோஷ் அதே பகுதியில் தனியார் ஹோட்டலில் சப்ளையராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், முதல் குழந்தை பிரையன் வீட்டில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனை அழைத்து சென்றபோது உயிர் பிரிந்துள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு மற்றொரு குழந்தையான பிரியங்காவும் திடீர் என இறந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றொரு குழந்தையையும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒரே வீட்டில் ஒரே நாளில் மட்டும் இரண்டு குழந்தைகள் இறந்ததை கண்டு அப்பகுதியினர் வருத்தத்தில் உறைந்துள்ளனர். சாப்பாடு விஷமாக மாறியதா அல்லது வேறு காரணமா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications