ஒரு பீர் விலை ரூ.300? தனியார் பார் மீது அதிரடி ஆக்ஷன்.. பின்னணியில் திமுக நிர்வாகி வெளியிட்ட ஆடியோ!
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் பார் மூடப்பட்டு, அந்த பாரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்குக் காரணம் திமுக நிர்வாகி ஒருவர் வெளியிட்ட ஆடியோ தான் என்கிறார்கள். அங்கு ஒரு பீர் ரூ.300க்கு விற்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட க்ளப் ஒன்று விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ட்விட்டரில் பதிவிட்டார்.

பல்லடத்தில் செயல்பட்டு வந்த அந்த பார் விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கவில்லை எனக் கூறி அதன் உரிமம் 90 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் இருப்பது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவிய ஆடியோ ஒன்று தானாம்.
பல்லடம் நகராட்சி அருகே உள்ள தனியார் பாரில், ஒரு பீர் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், பல்லடம் திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜ் அதனைத் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு, விற்பனை பணியாளர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து அவர் இது தொடர்பாகப் பேசி ஒரு ஆடியோவை வெளியிட்டார். ஒரு பீரை 300 ரூபாய்க்கு விற்பதை தட்டிக்கேட்டால் ஆளுங்கட்சிக்காரனையே மிரட்டுகிறார்கள். யாராவது ஒருத்தர் பணத்தை வாங்கிக்கொண்டால், கட்சிக்காரர்கள் எல்லோரும் அடிமையா? ஒரு பீருடன் சுண்டலும் பொறியும் கொடுத்துவிட்டு 300 ரூபாய் வசூல் செய்கிறார்கள் என குமுறி இருந்தார்.

இந்நிலையில் தான், விதிகளை மீறிச் செயல்பட்டதாக தனியார் பார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விலையை விட 10 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுவதாக செய்தியாளர் குற்றம்சாட்டியபோது அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குவாதம் செய்த நிலையில், அதிக விலைக்கு விற்ற புகாரால் தனியார் பார் மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications